ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு கூட்டம்.. விதிமுறையை தளர்த்த, குருமூர்த்தியை நம்பும் மத்திய அரசு!
Recommended Video
மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், மற்றும் மத்திய அரசு நடுவே மோதல் போக்கு உள்ள நிலையில், மத்திய அரசின் வாதங்களை முன் வைத்து, ரிசர்வ் வங்கியை வளைந்து கொடுக்கச் செய்யும் முயற்சியில், பகுதி நேர இயக்குநர் குருமூர்த்தி ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையிலுள்ள ரிசர்வ் வங்கி தலைமையகத்தில், அதன் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் இயக்குநர்கள் குழு கூட்டம் இன்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நடுவேயான மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குனர்களாக, ஆடிட்டரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி மற்றும் சதிஷ் மராதே ஆகிய பாஜக ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டனர். இன்றைய ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு கூட்டத்தில், இவர்கள், மத்திய அரசின் சார்பில் லாபி செய்து வாதம் முன் வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ரிசர்வ் வங்கி 9 சதவீத மூலதன ஆதாய விகிதத்தை கடை பிடிக்கிறது. சர்வதேச வங்கிகள் 8 சதவீத மூலதன ஆதாய விகிதத்தைதான் கடை பிடிக்கின்றன. எனவே, மூலதன ஆதாய விகிதம் தொடர்பான விதிகளை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
பாஜகவின் வாக்கு வங்கி சிறு, குறு தொழிலதிபர்கள் என்பதால், வங்கிகளில் எளிதாக தொழில் கடன் கிடைப்பதை உறுதி செய்வதே வரும் தேர்தலில் தங்கள் வெற்றிக்கு உதவும் என்று நினைக்கிறது. எனவே ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. இதற்கு குருமூர்த்தி உள்ளிட்டோர் உதவி செய்வார்கள் என்று தெரிகிறது.
இன்றைய ஆலோசனை கூட்டத்தின் முடிவில் என்ன மாதிரி முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பங்குச்சந்தை மற்றும் தொழில்முனைவோர், தொழிலதிபர்கள் மத்தியில் உள்ளது. ரிசர்வ் வங்கி கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்படும் முடிவுகள் மார்க்கெட்டில் எதிரொலிக்க காத்துக்கொண்டுள்ளன.