வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீர்க்கும் மழை.. வெள்ளக்காடான மும்பை.. ஒரே நாள் இரவில் 34 பேர் பலி
மும்பை: மும்பையில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து வருவதால் ஒரே நாள் இரவில் 34 பேர் பலியான சோகச் சம்பவம் நடந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்களில் விடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், குடியிருப்புகள், ரயில் தண்டவாளங்கள் ஆகிய இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலை எது, பள்ளம் எது என தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
மும்பையில் கனமழை: உத்தவ் தாக்கரே, நவாப் மாலிக் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
1974-ஆம் ஆண்டு
1974-ஆம் ஆண்டு மும்பையில் இது போன்ற பேய் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது ஒரே நாளில் 375.2 மி.மீ. மழை பெய்தது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே போன்ற மழையின் அளவு பதிவாகியுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதி
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த நிலையில் 375.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மும்பையின் தானே, பால்கர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தடுப்புச் சுவர்
மும்பை மலாடு கிழக்கு குரார் பிம்பிரிபாடா பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு ஆயிரக் கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மலையையொட்டி சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் எல்லையை வரையறுக்கும் வகையில் பெரிய தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டு இருந்தது.
காரில் பலி
இந்த நிலையில் அந்த சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்ததில் 21 பேர் பலியாகிவிட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அது போல் மும்பை மலாடு பகுதியில் உள்ள சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கியது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு கார் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது. இதில் காரில் இருந்த இருவர் வெளியே வரமுடியாமல் காரிலேயே பலியாகினர்.
34 பேர் பலி
தானேவில் உள்ள கல்யாணில் மழை பெய்து கொண்டிருந்த போது அங்குள்ள தேசிய உருது பள்ளி சுற்றுச் சுவர் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு இடிந்தது. இதில் 3 பேர் பலியாகிவிட்டனர். அதுபோல் புனே அம்பேகாவ் பகுதியில் உள்ள சின்ஹாட் என்ற கல்லூரியின் சுற்றுச்சுவர் மழையின் போது இடிந்தது. இதில் அந்த சுற்றுச்சுவரை ஒட்டி குடிசை அமைத்து தங்கியிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுபோல் ஒரே நாள் இரவில் 34 பேர் பலியான சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.