70 கிமீ வேகத்தில் வீசும் சூறாவளி காற்று.. பேய் மழை.. மும்பை மக்களே வெளியில் போகாதீங்க!
மும்பை: மும்பையில் இரண்டு நாட்களுக்கு மேலாக இடைவிடாமல் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இன்று மாலை முதல் மணிக்கு 70 கி.மீ வரை சூறாவளி காற்று வீசி வருகிறது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், வெளியில் செல்ல வேண்டாம் என்றும் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் மும்பை காவல்துறையும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
15 வருடங்களில் இல்லாத அளவு பெய்த கனமழையால் மும்பை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகளில் வெள்ளத்தில் கார்கள் கவிழ்ந்த கிடக்கின்றன. மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. எங்கும் தண்ணீர் தேசமாக மும்பை காணப்படுகிறது.
மும்பையில் அரபிக்கடல் கரையோரத்தில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்லும் காற்று வீசுகிறது. ஆள் உயரத்திற்கு கடல் அலைகள் ஆக்ரோசமாக பொங்குகினற்ன. டுவிட்டரில் மும்பையின் நிலை தொடர்பான படங்கள் மக்களின் துயர நிலையை எடுத்துக்காட்டுகின்றன. பல படங்களில் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது - தமிழகம், கேரளாவிற்கு கனமழை எச்சரிக்கை
கடுமையான மழை
இன்று மாலை நிலவரப்படி மும்பையின் கொலாபா பகுதியில் 22.9 செ.மீ மழை பெய்தது, சாண்டாக்ரூஸில் 8.8 செ.மீ மழை பெய்துள்ளது. பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக, சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் முதல் வாஷி வரையிலும், தானே செல்லும் பிரதான பாதையிலும் துறைமுக பாதையிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
மும்பை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் நிலைமையை ஆய்வு செய்துள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாளைக்கு அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் அதிகாரிகளை எச்சரிக்கையாக இருக்கும்படி மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பாக இருங்கள்
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், அமைச்சருமான ஆதித்யா தாக்கரே வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "அனைவரையும் வீட்டிற்குள் இருக்குமாறு வேண்டுகிறேன். மும்பையில் அதி வேகமான காற்று மற்றும் மிக அதிக மழை பெய்து வருகிறது. பாகாப்பபாக இருக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
வெளியில் போக வேண்டாம்
மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், "மும்பை மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம், அது மிகவும் அவசியமானால் தவிர வெளியே செல்ல வேண்டாம். மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடியுங்கள் கரையோரத்திலோ அல்லது நீர் வெள்ளமாக பாயும் பகுதிகளுக்கு அருகிலோ செல்ல வேண்டாம். தயவுசெய்து அவசர காலங்களில் 100க்கு அழையுங்கள். கவனமாக இருங்கள். மும்பையில் பாதுகாப்பாக இருங்கள்" என்று ட்வீட் செய்துள்ளனர்
3 பேர் உயிரிழப்பு
திங்கள்கிழமை மாலை 7 மணி முதல் பெய்த மழையால் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. கடந்த 10 மணி நேரத்தில், 230 மிமீ மழை மும்பையில் பெய்தள்ளது. 2005 ஆம் ஆண்டிற்கு பின் மிகப்பெரிய வெள்ள பாதிப்பு மும்பையில் ஏற்பட்டுள்ளது. மும்பையின் புறநகர் சாண்டாக்ரூஸில், 35 வயதான ஒரு பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் நேற்று காலை வீடு இடிந்து விழுந்ததில் பலியாகினர்.