விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை.. வெள்ளக்காடான மும்பை.! சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு
மும்பை: நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த பெருமழையால், நகர் முழுவதுமே வெள்ளக்காடாக மாறியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
நேற்று ஒரே இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் சுமார் 3 அடிக்கு வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. நகரிலுள்ள முக்கிய ரயில் தண்டவாளங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.
மும்பையில் கடந்த சில நாட்களாக விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே ஏராளமான இடங்களில் முழங்கால் அளவை தாண்டி, மழை நீர் தேங்கி மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் மும்பை நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பால்கர் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள நீர் புகுந்ததால் மும்பை-வல்சாத்-சூரத் மார்கத்தில் இயங்கும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. தண்டவாளத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் சில ரயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்படுகின்றன.
Due to waterlogging at Palghar following trains are Short-Terminated, cancelled and Rescheduled as on 01-07-19. @WesternRly pic.twitter.com/jV7S44mPv7
— DRM WR MumbaiCentral (@drmbct) July 1, 2019
மக்களின் வசதிக்காக ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்தும், போக்குவரத்து மாற்றம் குறித்தும் மேற்கு ரயில்வே நிர்வாகம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறது. பாதுகாப்பை உறுதி செய்ய, இயக்கப்படும் ரயில்களை 30 கிமீ வேகத்திற்கு மேல் இயக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
சர்ச்ச்கேட்-மரைன் மார்கத்தில் பலத்த காற்றுடன் கொட்டிய மழையால் அருகிலுள்ள கட்டுமானப் பணிகளில் இருந்து, மூங்கில் கம்புகள் ரயில்வே தடங்களில் விழுந்தது. இதனையடுத்து அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது.
நேற்றிரவு 11.30 மணிக்கு வெளுக்க துவங்கிய கனமழை இன்று அதிகாலை 5.30 மணி வரை விடிய விடிய கொட்டியுள்ளது இதனால் 6 மணி நேரத்திற்குள் மும்பை நகரில் 6.3 சென்டி மீட்டர் மழை பதிவாகியது. இதனால் மும்பை நகர வீதிகள் ஆறு மற்றும் குளங்களை போல காட்சியளித்து வருகின்றன.
Mumbai: Streets in Chembur flooded, following heavy rainfall in the state. pic.twitter.com/ovxTgWzhzP
— ANI (@ANI) July 1, 2019
கொட்டி தீர்த்த கனமழை தற்போது தற்காலிகமாக நின்றிருந்தாலும் மும்பை நகரை தொடர்ந்து கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் பகல் 9 மணிளயவில் கூட, மாலை சூரிய அஸ்தமனம் ஆகும் போது இருப்பதை போல நன்கு இருட்டாக காட்சியளிக்கிறது. குறிப்பாக கார்கர், சீயோன், கிங் சர்க்கிள், கிழக்கு தாதர் ஆகிய இடங்களில் கொட்டித் தீர்த்த மழையால், சாலைகளில் மழை நீர் இடுப்பளவிற்கு தேங்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை செய்ய இயலாமல் தவித்து வருகின்றனர். எனினும் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் பெருமழையால், மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ள பகுதிகளும் நல்ல மழையை கண்டுள்ளன.
தற்போது மராட்டிய மாநில ஏரிகளில் வெறும் 5 சதவீதமே தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், தொடர்ந்து கனமழை கொட்டுவதால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை தாமதமாக தொடங்கினாலும் ஜூன் மாதம் சராசரியாக பெய்ய வேண்டிய மழையானது, கடந்த மூன்று நாட்களாக வெளுத்தெடுக்கும் பெருமழை காரணமாக, 97% பெய்துள்ளதாக மாநில வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்த சில மணிநேரங்களுக்கு மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கர் ஆகிய இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.