மும்பை நகரை புரட்டி போட்ட கனமழை.. வெள்ள நீரால் சூழப்பட்ட சாலைகள்.! கடும் அவதியில் மக்கள்
மும்பை: நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால், பெரும்பாலான சாலைகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன.
இன்று காலை முதல் மும்பை நகரில் பெருமழை நிற்காமல் தொடர்ந்து பெய்து வருகிறது. சாண்டாகுரூஸ், தானே, தாராவி, கிங் சர்கிள், பாந்த்ரா உள்ளிட்ட மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில், காலை முதலே மழை விடாமல் கொட்டி வருகிறது.
மும்பையின் மேற்கு புறநகர் பகுதிகளில் 78.21 மில்லி மீட்டர் மழையும், கிழக்கு புறநகர் பகுதிகளில் 64.14 மில்லி மீட்டர் மழையும், மும்பை நகரில் 43.23 மில்லி மீட்டர் மழையும் சுமார் 5 மணி நேரத்திற்குள் கொட்டி தீர்த்துள்ளது. தொடர் மழை காரணமாக முக்கிய சாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மும்பை மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாகவே கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் மும்பை நகரம், தற்போது பெய்து வரும் மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்துள்ளது. தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளில், சுமார் மூன்றரை அடி அளவிற்கு மழை நீர் புகுந்துள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்த மும்பைவாசிகள், கடந்த சில மாதங்களாக வாட்டி வந்த வெயிலால் கடும் வெப்பத்தில் அவதிப்பட்டு வந்தோம்.தற்போது காலை முதலே கொட்டி தீர்க்கும் மழையால், மும்பையின் தட்பவெப்பம் மொத்தமாக மாறி குளிர்ச்சி நிலவுகிறது. இது மிகவும் உற்சாக மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த உற்சாகத்தை முழுமையாக கொண்டாட முடியாத அளவிற்கு, மும்பை நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அது தான் தங்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. எங்கு பார்த்தாலும் தண்ணீராகவே உள்ளது. ஒரு நாள் மழைக்கே மும்பை நகர தெருக்கள் ஏரிகளை போல மாறிவிடுகின்றன.
ஆண்டுதோறுமே பருவமழை காலங்களின் போது இதே பிரச்னையை தவறாமல் நாங்கள் சந்தித்து வருகிறோம். மழை பெய்தால் மும்பை வெள்ளக்காடாவதை தவிர்க்க, நிரந்தர தீர்வு வேண்டும் என மும்பைவாசிகள் குறிப்பிட்டுள்ளனர். ரயில் தண்டவாளங்களை வெள்ள நீர் ஆக்கிரமித்திருப்பதால் பல இடங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மும்பை, தானே, ரத்னகிரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்திற்கு, கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மும்பையில் மழை நீடிக்கும் என்ற வானிலை மையத்தின் எச்சரிக்கையால், மும்பைவாசிகள் கலக்கமடைந்துள்ளனர்
மராட்டியத்தில் ஆண்டுதோறும் ஜூன் 10ம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கிட்டத்தட்ட 2 வாரங்கள் தாமதமாக பருவமழை அம்மாநிலத்தில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.