Nisarga: ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மும்பை.. குறைந்த பாதிப்புகளுடன் புயலில் இருந்து தப்பியது எப்படி?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் அலிபாகில் நேற்று கரையை கடந்த நிசர்கா புயலால் 3 பேர் பலியாகிவிட்டனர். மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் அது எதிர்பார்த்ததை விட சற்று குறைவான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா தொற்று நோயால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயை கட்டுப்படுத்தும் முயற்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் நிசர்கா புயல் பீதியை கிளப்பியது.
இது தீவிர புயலாக மாறியதை வைத்தும் இது கரையை கடக்கும் விதம், வேகம் ஆகியவற்றை வைத்தும் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தை புரட்டி போட்டது போல் இந்த நிசர்கா புயல் மகாராஷ்டிரத்தை ஒரு வழி செய்யும் என கருதப்பட்டது.
நடுங்க வைக்கும் நிசர்கா புயலில் சிக்கி.. ஆட்டம் கண்ட கப்பல்!.. ரப்பர் போல் வளைந்த தென்னை மரங்கள்
மகாராஷ்டிரா
மும்பையின் தென்கிழக்கு பகுதியில் 75 கி.மீ. தூரத்தில் நேற்று கரையை கடந்தது. அப்போது மகாராஷ்டிரா கடலோரத்தில் புயல் காற்றும் கனமழையும் பெய்தது. ரத்னகிரிக்கு அருகில் புயலின் கண் இருந்ததால் அந்த மாவட்டத்திலும் ராய்காட் மாவட்டத்திலும் கடல் அலைகள் 6 முதல் 8 அடி வரை உயர்ந்தன. ரத்னகிரியில் நேற்று காலை முதல் 38 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மின் தடை
ராய்காட்டின் அலிகார் மற்றும் பால்கர் மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள தகடால் ஆன கூரைகள் பறந்தன. மரங்கள் வேரோடும், மின் கம்பங்கள் முழுவதுமாகவும் சாய்ந்தன. ராய்காட், பால்கர், தானே மற்றும் புனே ஆகிய மாவட்டங்களில் 25 லட்சத்திற்கு மேற்பட்ட பயன்பாட்டாளர்களுக்கு மின் தடை செய்யப்பட்டது.
வலுவிழந்தது
கொங்கன் ரயில் தண்டவாளம் வழியாக கேரளாவையும் மும்பையையும் டெல்லியையும் இணைக்கும் 4 தொலைதூர ரயில்கள் திருப்பிவிடப்பட்டன. ராய்காட்டில் ட்ரான்ஸ்பார்மர் விழுந்து 58 வயது நபர் ஒருவர் பலியானார். புனே மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்து 65 வயது மூதாட்டியும் 52 வயது நபரும் பலியாகிவிட்டனர். மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் மகாராஷ்டிரா கடலோரத்தில் கரையை கடந்த நிசர்கா நேற்று இரவு 9 மணிக்கு வலுவிழந்தது.
தப்பிய மும்பை
மும்பைக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த புயலில் இருந்து மும்பை தப்பியது. காற்றின் திசை வடகிழக்கு பக்கம் வீசியதால் எதிர்பார்த்ததைவிட பாதிப்பு குறைவாகவே இருந்தது. இதனால் இந்த புயலில் இருந்து மும்பை தப்பியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.