அடுத்தடுத்து மும்பை கடலில் வரப்போகுது ராட்சத அலைகள்.. வானிலை ஆய்வு மையம் வார்னிங்
Recommended Video
மும்பை: மும்பை கடற்கரையில் 3.76 மீட்டர் உயரத்திற்கு அலை எழும்பும் என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளதால், பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.
மும்பையில் கடந்த ஐந்து நாட்களாக கன மழை பெய்கிறது. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
சாலைகளே தெரியாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது போதாது என்று, கடலில் ராட்சத அலை எழும்பும் என்று, மும்பை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடற்கரைக்கு போக வேண்டாம் என மீட்பு படையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
காலை 10.44 மணிக்கு, மும்பை கடற்கரையில் 3.76 மீட்டர் உயரத்திற்கு அலை எழும்பும் என்று அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 10 அடி உயரத்திற்கு அலை எழும்பும்.
இதன்பிறகு 11.23 மணியளவில் அடுத்த ராட்சத அலை எழும். இப்படி அடுத்த சில நாட்களுக்கு ராட்சத அலைகள் எழும்.
மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளான மால்வன் முதல் வசாய் வரை புதன்கிழமை இரவு 11.30 மணி வரை, ராட்சத அலைகள் அவ்வப்போது எழும்பும் வாய்ப்பு இருப்பதாக, கடல் தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று நாட்களில் மும்பை மற்றும் மும்பை பெருநகரப் பகுதியில் கனமழை முதல், மிக அதிக மழை பெய்யும் என்று மும்பை ஆணையர் இன்று அறிவிப்பு ஒன்றில், கூறினார், வானிலை அப்டேட்டுகளை கவனித்து அதற்கேற்ப திட்டமிடுமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.