ரூ.375 முதல் ஸ்டார்ட்.. வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சூப்பர் பேக்கேஜ்கள்
மும்பை: கொரானா வைரஸ் பரவல் என்பது மார்ச் மாதம் வரை வெளிநாட்டில் கேள்விப்பட்ட ஒரு தகவலாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் பல இடங்களில் பரவியதை மக்கள் செய்திகள் வாயிலாக அறிந்தனர்.
மே மாதத்தில் அவரவர் மாநிலங்களில் நோய் பாதிப்பு அதிகரித்ததை புரிந்து கொண்டனர். ஜூன் மாதத்தில் சொல்லவே வேண்டாம், ஒவ்வொரு மாவட்டத்திற்குள் கொரோனா பரவல் என்பது மிக அதிகமாகி விட்டது. இப்போது என்னடாவென்றால், பக்கத்து தெரு, அடுத்த வீடு, என பாதிப்பு மிக அருகாமையில் வந்து விட்டதை பார்த்து கவலையில் உள்ளனர் மக்கள்.
ஆனால் இத்தனை பேருக்கு நோய் பாதிப்பு ஏற்படும்போது மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க போதிய வசதி இருக்காது.
கொரானா- தனிமைப்படுத்தப்பட்டோர் மையமாக மாறுகிறதா விஜயகாந்தின் பொறியியல் கல்லூரி?- அதிகாரிகள் ஆய்வு
வீட்டு தனிமைப்படுத்துதல்
எனவே லேசான அறிகுறி இருப்பவர்களுக்கும், குறைந்த வயது உடையவர்களுக்கும் வீட்டிலேயே சிகிச்சை அளிக்க வீட்டு தனிமைப்படுத்துதல் என்ற நடைமுறையை அனைத்து மாநில அரசுகளும் கையில் எடுத்துள்ளன. ஒருமுறை கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்துவிட்டால் அவர்களை 14 நாட்கள் வீட்டு தனிமையில் வைத்து, பிறகு குணமடைந்து விட்டதாக முடிவு செய்து வீட்டில் வைத்த நோட்டீசை அகற்றுகிறது தமிழக நடைமுறையாக இருந்துவருகிறது.
நோயாளிகளின் சந்தேகங்கள்
தனியார் மருத்துவமனை என்றால், சிகிச்சை முடிந்த பிறகும் பரிசோதனைகள் செய்து கொரோனா தொற்று முழுமையாக குணம் அடைந்து விட்டதை உறுதி செய்த பிறகுதான் வீட்டை விட்டு வெளியே செல்ல பரிந்துரைக்கிறார்கள். வீட்டுக்குள் இப்படி அடைபட்டுகிடப்பவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. திடீரென மாறக்கூடிய உடல்நிலை, புதிய வைரஸ் என்பதால் புதிது புதிதாக காட்டக்கூடிய அறிகுறிகள், இவற்றையெல்லாம் வைத்து அவர்கள் பதற்றம் அடைகிறார்கள்.
வெளியே செல்ல முடியாது
உடனடியாக அவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்களோ, அந்த மருத்துவமனையை தொடர்பு கொள்கிறார்கள். டாக்டர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை கேட்கிறார்கள். தொலைபேசியில் ஆலோசனை கேட்போரும் உண்டு. வீட்டை விட்டு பொதுவாகனத்தில் கொரோனா நோயாளிகளால் வெளியே சென்று மருத்துவமனையை அடைய முடியாது. அனுமதி கிடையாது. மருத்துவமனையின் ஆம்புலன்சுக்கு போன் செய்து அவர்கள் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று டாக்டரை பார்த்தால்தான் உண்டு. இதற்கு ஏகப்பட்ட செலவாகும் என்பதால் மக்கள் செய்வதறியாது விழிக்கிறார்கள்.
ரூ.375 பேக்கேஜ்
இந்த நிலையில்தான், வீட்டு தனிமையில் இருப்போருக்கு சிறப்பு பேக்கேஜ் மூலமாக சிகிச்சை அளிக்க பல முன்னணி மருத்துவமனைகள் முன்வந்துள்ளன. மும்பையை சேர்ந்த எச்என் ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனை 375 ரூபாய் பேக்கேஜில் ஆரம்பிக்கிறது. இந்த மருத்துவமனை பெங்களூரில் இருப்பதாகவும் மருத்துவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களுடன் ஒரு மெசேஜ் வைரலாக சுற்றி வருகிறது. இது தொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டோம்.
பெங்களூரில் மருத்துவமனை இல்லை
அவர்கள் கூறுகையில், எங்களது மருத்துவமனை கிளை பெங்களூரில் கிடையாது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது. எங்களிடம் மூன்று வகையான பேக்கேஜ்கள் இருக்கின்றன என்பது உண்மைதான் .375 ரூபாய், 500 ரூபாய் மற்றும் 700 ரூபாய் ஆகிய பேக்கேஜ்கள் உள்ளன என்று தெரிவித்தனர்.
டாக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ்
இந்த பேக்கேஜ்கள் இடையே என்ன வித்தியாசம் என்ற கேள்வியை முன்வைத்தோம். ஒரு நாளைக்கு எத்தனை முறை டாக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை பெறலாம் என்பதில்தான் இந்த வித்தியாசம் அடங்கியுள்ளது. ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 375 ரூபாய் என்ற அளவில் எங்கள் பேக்கேஜ் துவங்குகிறது என்று தெரிவித்தனர். உங்களுக்கும் மும்பையில், இதுபோன்ற சேவை தேவைப்பட்டால், 1800221166 or 9324947776 என்ற எண்களை தொடர்பு கொள்ளுங்கள். அதேநேரம், தமிழகத்திலும் பல மருத்துவமனைகளிலும் இதே மாதிரியான வழிமுறைகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. இதனால் நோயாளிகள் வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடி, அச்சப்படாமல் உரிய மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வழி ஏற்படும்.