பயிற்சி கொடுத்தனர்.. தலையிலும், கண்ணுக்கு மேலும் சுட்டு தபோல்கரை கொன்றேன்! கொலையாளி பரபர வாக்குமூலம்
Recommended Video
மும்பை: இடதுசாரி சிந்தனையாளரும், பகுத்தறிவாளருமான, நரேந்திர தபோல்கரை கொலை குற்றவாளி, போலீசில் அளித்த வாக்குமூலத்தில், தபோல்கரை எப்படி இரண்டு முறை சுட்டுக் கொன்றேன் என்று பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு முதல் அடுத்தடுத்த ஆண்டுகளில், பகுத்தறிவாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என இடதுசாரி சிந்தனையாளர்கள் 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புனேவில் தபோல்கர் வாக்கிங் சென்றபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு, பிப்ரவரியில் கோவிந்த் பன்சாரே மற்றும் ஆகஸ்டில், எம்.எம்.கல்பூர்கி ஆகியோரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே 2017ம் ஆண்டு செப்டம்பரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலைகள் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தின.
துப்பாக்கி தயாரிப்பு
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம், நல்லசோபராவில் கைத்துப்பாக்கி உற்பத்தி பிரிவில் அம்மாநில போலீசார் நடந்திய ரெய்டின்போது, சரத் கலாஸ்கர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்போது, பகுத்தறிவாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலைகளுக்கு இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த தகவல் பின்னர் கர்நாடக போலீசாருடன் பகிரப்பட்டது.
பரபரப்பு வாக்குமூலம்
இந்த நிலையில் சரத் கலாஸ்கர் அளித்த 14 பக்க வாக்குமூலம் சில ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ளது. தனது வாக்குமூலத்தில் கொலை நிகழ்வை அவர் நினைவுகூர்ந்துள்ளார். தன்னை சில வலதுசாரியினர் தொடர்பு கொண்டதாகவும், சித்தாந்தம், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் செயல்முறை ஆகியவை குறித்து தனக்கு அவர்கள்தான் சொல்லி கொடுத்ததாகவும், திடுக்கிடும் தகவலை சரத் கலாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இரு குண்டுகள்
இதன்பிறகு, சில தீய சக்திகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வீரேந்திர தவ்டே என்னிடம் தெரிிவித்தார். அதையேற்று நானும் தபோல்கரை சுட்டுக் கொன்றேன். நரேந்திர தபோல்கரை தலையில் சுடுமாறு தவ்டே என்னிடம் கூறியிருந்தார். அதன்படி நான் சுட்டேன். பின்னால் இருந்து தலையில் சுட்டேன். அவர் கீழே விழுந்ததும், கண்ணுக்கு மேல் பகுதியை குறி வைத்து சுட்டேன். 2 குண்டுகளை தலையில் பாய்த்து கொன்றேன். என்னுடன் வந்த சச்சின் அந்துரே என்ற கூட்டாளியும், தபோல்கரை சுட்டார். இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கூட்டங்கள்
விரேந்திர தவ்டேதான், அமோல் கலே, என்பவரை சரத் கலாஸ்கருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த அமோல் கலே என்பவர்தான், கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கவுரி லங்கேஷை கொலை செய்ய திட்டம் தீட்டிய பல கூட்டங்களுக்கு, தானும் சென்றதாக சரத் தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் மூளையாக இருந்த வீரேந்திர தவ்டே, சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.