ஒரே நபருக்கு 2வது முறை கொரோனா தாக்கினால்.. உடல்நிலை பாதிப்பு எப்படி இருக்கும்.. வெளியான ஆய்வு முடிவு
மும்பை: ஏற்கனவே ஒருமுறை பாதிப்பிலிருந்து குணமடைந்தவருக்கு, கொரோனா தொற்று மறுபடியும் பாதித்தால், அது கடுமையாக இருக்கிறது என்கிறது ஆய்வு முடிவுகள்.
மும்பையைச் சேர்ந்த நான்கு சுகாதாரப் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றை, தி லான்செட் மெடிக்கல் ஜர்னலின் இணையதளம் வெளியிட்டுள்ளது. இவர்கள் நான்கு பேரும் ஏற்கனவே கொரோனாவால் பாதித்து குணமடைந்தவர்கள். மீண்டும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு பேருக்கும் முந்தைய பாதிப்புடன், ஒப்பிடும்போது இரண்டாவது பாதிப்பின்போது விளைவுகள் கடுமையாக இருந்தன.
சென்னை புறநகர் ரயில் சேவை எப்போது தொடங்கும்.. நல்ல செய்தி சொன்ன ரயில்வே ஐஜி அருள் ஜோதி!
ஆய்வுகள்
மாநகராட்சி நடத்தும் நாயர் மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று மருத்துவர்களும், இந்துஜா மருத்துவமனையைச் சேர்ந்த மற்றொரு சுகாதாரப் பணியாளரும்தான், இந்த நான்கு நோயாளிகள் ஆகும். டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் (ஐ.ஜி.ஐ.பி) மற்றும் சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி மையம் (ஐ.சி.ஜி.இ.பி) ஆகியவற்றுடன் இரு மருத்துவமனைகளும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.
அறிகுறி அதிகம்
பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கும், இரண்டாவது பாதிப்பில் கொரோனா அறிகுறிகளான இருமல், சளி, காய்ச்சல் போன்றவை அதிகம் இருந்தன. நோயை குணப்படுத்தவும் நீண்ட காலம் தேவைப்பட்டது என்று அந்த ஆய்வறிக்கையில் நாயர் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஜெயந்தி சாஸ்திரி மற்றும் ஐ.சி.ஜி.இ.பி.யின் டாக்டர் சுஜாதா சுனில் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பரிசோதனைகள்
முன்களத்தில் உள்ள சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரசால் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள். RT-PCR சோதனை மட்டுமே இவர்களுக்கு மறு பாதிப்பு வந்துள்ளதை உறுதி செய்ய உதவாது. முழு மரபணு வரிசைமுறை (WGS) சோதனையால் இதை கண்டறியலாம் என்று இந்த ஆய்வில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை தேவை
எனவே, ஒருமுறை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள், மறுபடியும் தங்களுக்கு பாதிப்பு வராது என மெத்தனமாக இருக்க வேண்டாம். இரண்டாவது முறை பாதிப்பு ஏற்பட்டால், அது மோசமாக இருக்கும் என்பதால், தங்களை சமூக விலகல் மூலம் தக்காத்துக் கொள்வது நல்லது என்பதே இந்த ஆய்வு முடிவு சொல்லும் பாடம்.