சிவசேனா- தேசியவாத காங். இணைந்து புதிய அரசு... ஊசலாட்டத்தில் சரத்பவார்? சோனியாவுக்கும் 'செக்'
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து புதிய அரசு அமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விரும்புவதாகவும் ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதை விரும்பவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் தேசியவாத காங்கிரஸுக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி கொடுத்தால் அப்போது காங்கிரஸ் ஆதரவு தர வேண்டிய சூழல் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 105; சிவசேனா- 56; தேசியவாத காங். 54; காங்கிரஸ்-44 இடங்களில் வெற்றி பெற்றன. இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆட்சி அமைப்பதற்கு தேவையான 146 எம்.எல்.ஏ.க்களை எந்த கட்சியும் பெறவில்லை. பாஜகவும் சிவசேனாவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் இருந்து வந்தது.
காங்.- என்சிபியை மலை போல் நம்பிய சிவசேனா.. ஆதரவு அளிக்க சோனியா மறுப்பு?
பாஜக பிடிவாதம்
ஆனால் சட்டசபை தேர்தலுக்கு முன்னர் சமமான அதிகாரப் பகிர்வு என்பதை ஒப்புக் கொண்ட பாஜக இப்போது சிவசேனாவுக்கு சமமான அதிகாரப் பகிர்வு இல்லை என்கிறது. சிவசேனாவின் சுழற்சி முறையிலான முதல்வர் பதவி கோரிக்கையையும் நிராகரித்து வருகிறது.
அமித்ஷாவுடன் சந்திப்பு
இதில் பாஜக, சிவசேனா இரு கட்சிகளுமே திட்டவட்டமாக இருப்பதுடன் இரு கட்சிகளும் பரஸ்பரம் மிக கடுமையாக விமர்சித்தும் வருகின்றன. இது தொடர்பாக டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை மகாராஷ்டிரா சட்டசபை குழு பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசினார். இப்பேச்சுவார்த்தையின் முடிவில், மகாராஷ்டிராவில் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என்றார் பட்னாவிஸ்.
சோனியா- பவார் சந்திப்பு
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசு அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது. இதற்கு காங்கிரஸ், சிவசேனா இரு கட்சிகளிலுமே ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இதனையடுத்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி உடன் இருந்தார்.
காங்கிரஸ் ஆதரவு தராது?
இப்பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம், சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தராது என சோனியா கூறினாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அப்படித்தான் தெரிகிறது என பட்டும்படாமலும் பதில் கூறினார். அதேநேரத்தில் ஒருவேளை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டால் அந்த அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு தரக் கூடுமோ? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
பவார் தடுமாற்றம்
இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், நாங்கள் மீண்டும் சந்தித்து பேச உள்ளோம். மும்பைக்கு சென்று ஆலோசனைகளை நடத்திவிட்டு மீண்டும் சோனியாவிடம் பேச இருக்கிறேன் என்றார். அத்துடன், தற்போதைய நிலையில் ஆட்சி அமைப்பதற்கான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை எங்களிடம் இல்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமரத்தான் எங்களுக்கு மக்கள் வாக்களித்திருக்கின்றனர். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது என்றும் பூடகமாக பதில் கூறினார் பவார்.
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி?
மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி நவம்பர் 9-ந் தேதிக்குள் அமைந்தாக வேண்டும். இல்லையெனில் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். இதனால் மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் தொடருகிறது.