யாருங்க சொன்னது பேச்சுவார்த்தைன்னு? எனக்கு தெரியாது... என்சிபி- காங். ஆலோசனை குறித்து சரத்பவார்
மும்பை: ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸுடன் இன்று பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கட்சிகள் ஆட்சி அமைக்கவில்லை. இதையடுத்து 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று இரவு 8.30 மணிக்குள் ஆட்சி அமைப்பது தொடர்பான கடிதத்தை தர என்சிபி க்கு ஆளுநர் கோஷ்யாரி கெடுவும் விதித்துள்ளார். அதேநேரத்தில் என்சிபி ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரஸ் எந்த முடிவையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை என்சிபி தலைவர் சரத்பவார் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சரத்பவார், காங்கிரஸுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என யார் கூறினார்கள்? எனக்கு எதுவும் தெரியாது என்றார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பநிலை நீடிக்கிறது.