பாஜக-சிவசேனா மோதலுக்கு மத்தியில்.. மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு.. சிக்கியது பல கோடி!
மும்பை: பாஜக மற்றும் சிவசேனா இடையே ஆட்சி விஷயத்தில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் மும்பை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் கணக்கில் வராத 735 கோடி ரூபாய்க்கான நிதி முறைகேடுகளை கண்டுபிடித்தனர்.
மகாராஷ்டிராவில் யார் தலைமையில் ஆட்சி அமைப்பது என்ற விவகாரத்தில் பாஜக சிவசேனா இடையே மோதல் முற்றியது.இதன் காரணமாக கூட்டணி முறிந்து போன நிலையில், சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க தயாராகி வருகிறது. இதனால் மகாராஷ்டிராவில் பரபரப்பு நிலவுகிறது.
இந்த சூழலில் மும்பை மாநகராட்சியில் டெண்டர்களை எடுத்து கட்டிடங்கள் மற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததார்களின் வீடுகளில் வருமான வரித்துறை ஒரே நேரத்தில் நவம்பர் 6ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது.
பிரிஹன்மும்பை மாநகாட்சி ஒப்பந்ததாரர்களை குறிவைத்து மும்பை மற்றும், சூரத் உள்பட 37 இடங்களில் அவர்களின் வீடுகள் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் ஐடி ரெய்டு நடந்தது.
இந்த சோதனையில் 735 கோடி ரூபாய் நிதிமுறைகேடுகளை இதுவரை கண்டுபிடித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சில ஒப்பந்ததார்கள் கடன் வாங்கியது போல் கணக்கு காட்டியதும், சிலர் செலவு கணக்குகளை அதிக அளவில் உயர்த்திகாட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி ஆகியவற்றுக்கான பெரிய அளவிலான ஆதாரங்கள் உள்ளதாக நேற்று மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.