பாஜகவை விட்டு விலகப் போவது இல்லை... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பங்கஜா முண்டா
மும்பை: பாஜகவை விட்டு தாம் விலகப் போவது இல்லை என மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பங்கஜா முண்டா தோல்வியைத் தழுவினார். தமது தோல்விக்கு காரணமே பாஜக அதிருப்தி தலைவர்கள் என்பது பங்கஜா முண்டாவின் குற்றச்சாட்டு.
மேலும் ஏக்நாத் கட்சே போன்ற ஓபிசி தலைவர்கள் தாங்கள் திட்டமிட்டே பாஜகவின் ஒரு பிரிவு தலைவர்களால் தோற்கடிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர். அத்துடன் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி எதிர்காலம் குறித்து முடிவு எடுப்போம் என்றும் பங்கஜா முண்டா கூறியிருந்தார்.
இதனால் பாஜகவை விட்டு பங்கஜா முன்டா, ஏக்நாத் கட்சே போன்றோர் விலகலாம் என கூறப்பட்டது. இவர்களில் ஏக்நாத் கட்சே, என்சிபி தலைவர்களை சந்தித்து பேசி வந்தார்.
இந்நிலையில் பாஜகவை வளர்க்க தந்தை கோபிநாத் முண்டே அத்தனை பணிகளையும் செய்தார். பாஜகவின் முகமாக இருந்தார். அவர் வளர்த்த கட்சியைவிட்டு தாம் விலகப் போவது இல்லை என கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பங்கஜா.