இந்துத்துவா என்பது மணி அடிப்பது அல்ல..முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து பாருங்க.. உத்தவ் தாக்கரே உக்கிரம்
மும்பை: எங்களது இந்துத்துவா கொள்கை என்பது கோவில் வழிபாடு, பூஜைகளில் மணி அடிப்பது என்பது மட்டுமல்ல.. அதற்கு மேலாக தேசியவாதமும் இணைந்ததுதான் எங்களது இந்துத்துவா கொள்கை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக மாநில ஆளுநர் கோஷ்யாரிக்கும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்
கோஷ்யாரி கேள்வி
உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், கோவில்களை திறக்காமல் இருப்பதுதான் நீங்கள் கடைபிடிக்கும் இந்துத்துவா கொள்கையா? நீங்கள் எப்போது மதசார்பின்மை கொள்கையை கடைபிடிக்க தொடங்கினீர்கள்? என கேள்வி கேட்டிருந்தார். இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலையே கிளப்பிவிட்டது.
மோடியிடம் புகார்
ஆளுநர் கோஷ்யாரி வெளிப்படையாகவே அரசியல் செய்கிறார்; ஆளுநர் மாளிகையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறார் என பிரதமர் மோடிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடிதம் அனுப்பி இருந்தார். சிவசேனா தலைவர்களும் ஆளுநர் கோஷ்யாரியை வறுவறுவென வறுத்தெடுத்தனர்.
எது இந்துத்துவா?
இந்த நிலையில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சில் பங்கேற்று பேசிய உத்தவ் தாக்கரே உக்கிரத்தை கொட்டினார். அவர் பேசுகையில், நாங்கள் பேசும் இந்துத்துவா வேறாம்; பால் தாக்கரேவின் இந்துத்துவா வேறாம். இந்துத்துவா என்பது கோவில் வழிபாடு, பூஜை செய்வது, கோவில்களில் மணி அடிப்பது என்று மட்டும் நினைக்காதீர்கள். தேசியவாதம் என ஒன்று இருக்கிறது.
ஆட்சி கவிழ்ப்பு முயற்சி
மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கோவாவில் உங்களால் தடை விதிக்க முடியுமா? இதுதான் உங்களோட இந்துத்துவா முகமா? பாபர் மசூதியை நாங்கள் இடித்து தரைமட்டமாக்கியபோது உங்களது இந்துத்துவா முகங்கள் வாலை சுருட்டிக் கொண்டு அல்லவா இருந்தீர்கள்? மகாராஷ்டிராவில் எங்களது அரசு அமைந்த நாள் முதல் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சிக்கிறீர்கள்.
ஆட்சியை கவிழ்த்து பாருங்க..
கடந்த 11 மாதங்களாக ஆட்சி கவிழும் ஆட்சி கவிழும் என்றே கூறி வருகிறீர்கள். இந்த ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகிறீர்கள். எங்கே உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னுடைய அரசாங்கத்தை கவிழ்த்துதான் பாருங்களேன்.. இதை சவாலாகவே சொல்கிறேன்.. முடிந்தால் செய்து காட்டுங்கள்.
கொரோனா தடுப்பூசி
பீகார் மக்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்கிறீர்களே.. இந்த நாட்டில் வாழும் மக்கள் எல்லாம் வங்கதேசத்திலும் கஜகஸ்தானிலுமா இருந்தா வந்தவர்கள்? இப்படியான பேச்சுகளை பேசுவதற்காக வெட்கப்படுங்கள் என்றார்.