திருமணத்துக்கு சேர்த்து வைத்த பணத்தில்... ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஆட்டோ ஓட்டுநர்
மும்பை: புனேவில் திருமணச் செலவுக்காக சேர்த்து வைத்த ரூ.2 லட்சத்தை ஏழை எளியோர் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக செலவிட்டுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.
புனேவை சேர்ந்த அக்ஷய் கொத்வாலே என்பவர் சொந்தமாக ஆட்டோ வைத்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். இவரது திருமணம் வரும் 25-ம் தேதி நடைபெற இருந்த நிலையில், லாக்டவுன் காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் தனது திருமணச் செலவுக்காக ஆட்டோ ஓட்டி சேர்த்து வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாயை ஏழைகளின் பசிப்பிணி தீர்க்க செலவழித்துள்ளார் இந்த பெரிய மனசுக்காரர்.
லாக்டவுனால் தெருவோரம் வசிப்பவர்களும், புலம் பெயர் தொழிலாளர்களும் உணவுக்கு மிகுந்த சிரமப்படுவதை பார்த்த இவர், தினமும் 400 பேருக்கு சப்பாத்தியும், சாதமும் வழங்கியுள்ளார். நண்பர்கள் உதவியுடன் தினமும் தயார் செய்து அதனை எடுத்துச்சென்று விநியோகம் செய்திருக்கிறார். சாமனியரான ஆட்டோ ஓட்டுநரின் உள்ளத்தில் உயர்ந்த எண்ணம் இருப்பதை அறிந்த புனே மாநகராட்சி அதிகாரிகள் அக்ஷய் கொத்வாலேவை அழைத்து பாராட்டி சிறப்பித்துள்ளனர்.
தனது வருங்கால மனைவியின் ஒப்புதலுடன் திருமணத்துக்கு சேர்த்து வைத்த தொகையை ஏழைகளுக்கு உதவ பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார் இவர். மேலும், உணவு வழங்குவதோடு மட்டுமல்லாமல் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது ஆட்டோவில் ஒலிப்பெருக்கியை கட்டிக்கொண்டு பரப்புரையிலும் ஈடுபடுகிறார்.
57 நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் பேருந்து சேவை தொடக்கம்.. பொதுமக்கள் ஹேப்பி!
இதேபோல் லாக்டவுன் காலத்தில் பெரும்பாலானோர் வருமானம் இல்லாமல் இருப்பதால், கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தனது ஆட்டோவில் கட்டணம் ஏதும் இவர் வாங்குவதில்லை. லாக்டவுன் முடியும் வரை தன்னால் இயன்ற உதவிகளை சமூகத்திற்கு செய்வேன் என உறுதிப்படக் கூறுகிறார் உள்ளத்தால் உயர்ந்த இந்த மனிதர்.