3 நாள்தான் பாக்கி.. வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? மறந்து விடாதீர்கள்.. அபராதம் போடுவாங்க
மும்பை: 2019-20 மதிப்பீட்டு ஆண்டிற்கான (2018-19 நிதியாண்டு) வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய இன்னும், மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி அறிக்கையை (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
நடப்பாண்டு ஆகஸ்ட் 31ம் தேதிக்குப் பிறகு வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும். ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை தாமதத்தின் அளவைப் பொறுத்து, அபராதம் விதிக்கப்படும்.
எனவே, வருமான வரி தாக்கல் குறித்து சில தகவல்களை அறிந்து கொண்டு, ஆக வேண்டிய வேலையை ஆரம்பித்துவிடுங்க, பாஸ்.
வயது பிரிவு
வருமான வரித் துறையின் தகவல்படி, தனிநபர் வருமான வரி செலுத்துவோர் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். 60 வயதிற்குட்பட்டவர்கள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஆனால் 80 வயதுக்குக் குறைவானவர்கள், மற்றும் சூப்பர் மூத்த குடிமக்கள், அதாவது 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவ்வாறு 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித் தாக்கல்
பொது பிரிவில், ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சம் வரை உள்ளவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை. மூத்த குடிமக்கள் (60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஆனால் 80 வயதுக்கு குறைவானவர்கள்) ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை இருந்தால் வரி தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். சூப்பர் மூத்த குடிமக்களுக்கு, அதாவது, 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், ரூ. 5 லட்சம் வரை வரித் தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். மற்றவர்கள் கட்டாயம் வரித் தாக்கல் செய்ய வேண்டும்.
பான் எண்
வருமான வரித் துறை ஆன்லைன் வசதியை வழங்கியுள்ளது - incometaxindiaefiling.gov.in மூலம் தனிநபர்கள் தங்கள் 2019-20 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய முடியும். வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய, தனிநபர்கள் தங்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) பயன்படுத்தி வருமான வரித் துறையின் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இருப்பினும், பான் (நிரந்தர கணக்கு எண்) அட்டை இல்லாதவர்கள் தங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு, வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யலாம்.
முன்கூட்டியே
ஐடிஆர் -1, ஐடிஆர் -2, ஐடிஆர் -3, ஐடிஆர் -4, ஐடிஆர் -5, ஐடிஆர் -6 மற்றும் ஐடிஆர் -7 ஆகிய ஏழு ஐடிஆர் படிவங்கள் உள்ளன. இப்போது ஐடிஆர் படிவங்கள் முன் நிரப்பப்பட்ட வடிவத்தில் (pre-filled format) கிடைக்கின்றன. இந்த முன் நிரப்பப்பட்ட படிவங்களில் பெற்ற வருமானம் மற்றும் வரி விவரங்கள் உள்ளன. இந்த விவரங்களை வங்கிகள், பரஸ்பர நிதிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் மற்றும் சார் பதிவாளர் போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடமிருந்து வருமான வரித்துறை பெற்றிருக்கும். இருப்பினும், முன் நிரப்பப்பட்ட தரவுகளை, கவனமாக சரிபார்க்கவும், வரி விதிக்கக்கூடிய வருமானத்தை சேர்க்கவும் வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஐந்து வகை
வருமான வரி அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் அதை சரிபார்க்க வருமான வரித் துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.டி.ஆர் சரிபார்க்க, வருமான வரித் துறை ஐந்து வழிகளை வழங்குகிறது: ஆதார் ஓடிபி (ஒரு முறை கடவுக்குறியீடு), வங்கி ஏடிஎம், வங்கி கணக்கு, டிமேட் கணக்கு மற்றும் ஆன்லைன் வங்கி சேவை ஆகியவை அந்த ஐந்து வழிமுறைகளாகும்.
அக்னாலட்ஜ்
வருமான வரி செலுத்துவோர், incometaxindiaefiling.gov.in மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம். இந்த வசதியை பெற, வருமான வரி செலுத்துனர் தனது பான் மற்றும் ஒப்புதல் எண் (acknowledgement) போன்ற விவரங்களை வழங்க வேண்டும். ஒப்புதல் எண் என்பது வருமான வரித் துறை ஈ-ஃபைலிங் போர்ட்டல் மூலம் ஆன்லைனில் வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்கும் போது வழங்கப்பட்ட அடையாள எண் ஆகும்.