மும்பை ஹோட்டலில்... சுயேச்சை எம்.பி.யின் உடல் கண்டெடுப்பு... போலீசார் தீவிர விசாரணை
மும்பை: தாத்ரா & நாகர் ஹவேலி பகுதியின் சுயேச்சை எம்.பி. மோகன் எஸ். டெல்கர் உடல் மும்பையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாத்ரா & நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் மோகன் எஸ். டெல்கர். இவர் தாத்ரா & நாகர் ஹவேலி தொகுதியில் இருந்து ஏழு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகினார்.
அதன் பின், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் அதைத்தொடர்ந்து பாரதிய நவசக்தி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கிய அவர், அக்கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
இந்நிலையில், 58 வயதான மோகன் டெல்கரின் உடல் மும்பையிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பதஞ்சலி மருந்து கொரோனாவை தடுக்கும் என்றால்... தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதற்கு? ஐஎம்ஏ கேள்வி
மேலும், அந்த அறையில் இருந்து தற்கொலை கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். மோகன் டெல்கரின் உடல் தற்போது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருவதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.