இந்தியா திராவிடர்கள், ஆதிவாசிகளுக்கு சொந்தமானது.. மோடி, ஷாக்களுடையது அல்ல -மும்பையில் முழங்கிய ஒவைசி
மும்பை: இந்தியா யாருக்காவது சொந்தம் என்றால் அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும்தான் என ஐதராபாத் எம்.பி.அசதுத்தீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், ஐதராபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அசதுத்தீன் ஒவைசி கலந்துகொண்டு உரையாற்றினார்.
எதிர்கட்சிகளின் அமைதி ஏன்? வாரணாசி கியான்வாபி மசூதி குறித்து அசதுத்தீன் ஒவைசி கேள்வி
இந்தியா திராவிடர்களுக்கு சொந்தமானது
அப்போது பேசிய அவர், "பாஜக, ஆர்.எஸ்.எஸ். எல்லாம் முகலாயர்களுக்கு பின்னர் வந்தவை. இந்தியா என்பது எனக்கோ, தாக்கரேக்களுக்கோ, மோடிக்களுக்கோ, ஷாக்களுக்கோ சொந்தமானது அல்ல. இந்தியா யாருக்காவது சொந்தம் என்றால் அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும்தான். ஆப்பிரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் இடம்பெயந்த பிறகுதான் இந்தியா என்ற நாடே உருவானது." என்றார்.
சரத் பவாரிடம் கேள்வி
இந்த உரையின்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நோக்கி கேள்வி எழுப்பிய அசதுத்தீன் ஒவைசி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய சரத் பவார், தனது கட்சியை சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்காதது ஏன்? பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகியவை தங்களை மதசார்பற்ற கட்சிகள் என்று சொல்கின்றன.
மதசார்பற்ற கட்சிகள்
இந்த கட்சிகளை சேர்ந்த யாரும் சிறைக்கு செல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் தங்கள் கட்சியை சேர்ந்த இஸ்லாமியர் சிறைக்கு சென்றால் அவர்களுக்கு பிரச்சனையில்லை. சஞ்சய் ராவத் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். நான் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். சஞ்சய் ராவத்துக்காக பிரதமர் மோடியை சந்தித்த சரத் பவார் ஏன் நவாப் மாலிக்கிற்காக பிரதமரை சந்திக்கவில்லை. எந்த வகையில் சஞ்சய் ராவத்தைவிட நவாப் மாலிக்கை குறைந்துவிட்டார்.
இஸ்லாமியர் என்பதுதான் காரணமா?
நவாப் மாலிக் இஸ்லாமியர் என்ற காரணத்தால் அவருக்காக சரத் பவார் பேசவில்லையா? அல்லது இருவரும் சமம் கிடையாதா? பிவாண்டியில் நமது கட்சியை சேர்ந்த காலித் குட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அரசுக்கும் ஊழலுக்கும் எதிராக இருந்ததால் காலித் குட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவர் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் தவறானவை. காலித் குட்டுவை விடுவிக்க வேண்டும் என சிவ சேனா கட்சி மற்றும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் கேட்டுக்கொள்கிறேன். " என்றார்.