லாக்டவுனால், தெருவிற்கு வரும் ஏழைகள்.. சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் அவலம்.. மத்திய அரசின் மூவ் என்ன?
மும்பை: 31 வயதானவர் ஷேக் பகதூர்ஷா.. கடந்த ஆண்டு மும்பையின் தெருக்களில்தான், வசித்து வந்தார், ஒரு நாளைக்கு சுமார் ரூ.400 என்ற மிக சொற்ப அளவுக்கான வருமானத்தைதான், தனது டாக்ஸி ஓட்டுநர் பணியிலிருந்து அவர் பெற முடிந்தது.
கடந்த டிசம்பரில் அவர் திருமணம் செய்துகொண்ட பிறகு, அவரது மனைவியின் உதவியோடு, ஒரு சிறிய குடியிருப்பில் வாடகைக்கு போனார்கள். அவர்கள் ஒன்றாக வாழ்க்கையை நகர்த்தினர்.
ஆனால் கொரோனா வைரஸை எதிர்த்த போராட்டத்தின் ஒரு முயற்சியாக, இந்தியாவின் பெரும்பகுதி இப்போது லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில், பகதூர் ஷாவின், நிலை மோசமாகக்கூடும்.
அவருக்கு இனி டாக்ஸி வாடிக்கையாளர்கள் இல்லை, அதாவது அரிசி மற்றும் பருப்பு வகைகளுக்கு அப்பால் அவர் எந்த உணவையும் வாங்க முடியாது. வீட்டு வாடகையை செலுத்த முடியாது.
"என்னிடம் சேமிப்பு இல்லை. நானும் என் மனைவியும் மீண்டும் தெருவுக்கு போகப்போகிறோம், " என்று ஏக்கத்தோடு சொல்கிறார் பகதூர் ஷா.
"அமெரிக்கா ஒரு பணக்கார நாடு, நீங்கள் அதை ஒரு மாதத்திற்கு லாக்டவுன் செய்து வைக்கலாம், அது பரவாயில்லை, ஆனால் இந்தியாவில் நீங்கள் ஏழைகளை கவனித்தில் கொள்ள வேண்டும்." என்று ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியுள்ள வார்த்தைகள் ஆளும் வர்க்கத்திற்கான எச்சரிக்கை மணி.
இந்தியாவின் அனைத்து மக்களையும், வீட்டிலேயே இருக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார், நாட்டின் நகர்ப்புறங்களில், பெரும்பான்மையானவர்கள் வீட்டுக்குள்ளேயே உள்ளனர். நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் 471 கொரோனா தொற்று மற்றும் 9 இறப்புகள் பதிவாகியுள்ளன.
மும்பையின் பரந்து விரிந்த தாராவி குடிசை பகுதியில் வசிக்கும், இந்தியர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்வதாக தெரிவிக்கும், அதேநேரத்தில், அரசின் சப்போர்ட் அவசியம் என்று சொல்கிறார்கள்.
வாழ்வாதாரங்களை பாதுகாத்தப்படியே, கொரோனா வைரஸை சமாளிப்பது எவ்வளவு கடினம் என்பதை இந்த பிரச்சினை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக, வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில், மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் பெரும் சவால்கள் உள்ளன.
"இதுவரை, பிரதமரின் தலையீடு, குடிமக்கள் மீது பொறுப்பை ஏற்படுத்தியுள்ளதே, தவிர, அரசு என்ன செய்யப் போகிறது என்பதை தெளிவாக விளக்கவில்லை" என்று டெல்லிக்கு அருகிலுள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் கில்லஸ் வெர்னியர்ஸ் கூறினார். .
தாராவியிலுள்ள, 21 வயதான அஜய் கெவாட், அவரது குடும்பத்திற்கு இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே உணவு வசதிகள் உள்ளன, ஒரு வாரத்திற்குப் பிறகு, உணவு இருக்காது என்று நான் பயப்படுகிறேன் என்று தெரிவிக்கிறார். இதுகுறித்து ராய்ட்டர்ஸ் சார்பில் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.