ஹைட்ராக்ஸிகுளோரோக்வின்.. வெறும் 3 ரூபாய் மாத்திரை.. திடீர் கிராக்கி.. உற்பத்தி கிடுகிடு அதிகரிப்பு!
மும்பை: வெறும் 3 ரூபாய் மாத்திரைதான் ஹைட்ராக்ஸிகுளோரோக்வின். ஆனால் இன்று இதன் மதிப்பு மிக மிக பெரியது. காரணம், இது கொரோனாவைரஸ் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்படுவதால்.
Recommended Video
உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனாவைரஸ் சிகிச்சைக்கு இதுவரை இதுதான் மருந்து என்று எதுவும் இல்லை. பல்வேறு கூட்டு மருந்துகளைத்தான் கொடுத்து வருகின்றனர் உலக நாடுகளின் மருத்துவர்கள். அப்படி டாக்டர்களால் கொடுக்கப்படும் மாத்திரைகளில் ஒன்றுதான் இந்த ஹைட்ராக்ஸிகுளோரோக்வின்.
சிகிச்சையில் இந்த மாத்திரையைப் பயன்படுத்தினால் நல்ல விளைவு ஏற்படுவதாக நம்பப்படுவதால் இந்த மாத்திரை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால்தான் டிரம்ப் டென்ஷனாகி "மாத்திரையைக் கொடுத்தால் ஆச்சு.. இல்லாட்டி போச்சு" என்று இந்தியாவைப் பார்த்து அவசரப்பட்டு வாயை விட முக்கியக் காரணம்.
இந்த மாத்திரைக்காக ஏன் உலக நாடுகள் இந்தியாவிடம் கெஞ்ச வேண்டும்.. காரணம் இருக்கிறது. உலக அளவில் மொத்த ஹைட்ராக்ஸிகுளோரோக்வின் மாத்திரை உற்பத்தியில் 70 சதவீதம் இந்தியாவில்தான் நடைபெறுகிறது. பிற நாடுகளில் மொத்தமே 30 சதவீத அளவுக்குத்தான் இதன் உற்பத்தி இருக்கிறது. இதனால்தான் இந்தியாவுக்கு இந்த மருந்து தொடர்பாக பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த கேரளா.. கொரோனா ஒழிப்பில் முன்னோடி மாநிலம்.. பரபர தகவல்கள்
மலேரியாவுக்கான மாத்திரை
இந்தியாவைப் பொறுத்தவரையில், ஹைட்ராக்ஸிகுளோரோக்வின் மாத்திரையானது மலேரியா, ருமட்டாய்ட் ஆர்த்திரைட்டிஸ் (மூட்டுவலி), லூபஸ் (உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்து உடல் உறுப்புகளை செயலிழக்க வைத்து மரணத்தை விளைவிக்கும் நோய்) ஆகியவற்றின் சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு மலேரியாவுக்கு 8000 பேர் பலியாகியதாக ஹூ அறிக்கை தெரிவிக்கிறது. மலேரியாவுக்கு குளோரோக்வின் பாஸ்பேட் மருந்துதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம், ஹைட்ராக்ஸிகுளோரோக்வின் மருந்து நல்ல முடிவைக் கொடுத்ததால் அதையும் பயன்படுத்துகின்றனர்.
மருந்து நிறுவனங்கள்
இந்தியாவில் இந்த மாத்திரையை மிகப் பெரிய அளவில் தயாரிப்பவர்கள் ஸைடஸ் கடிலா, இப்கா லேப்ஸ், இன்டாஸ் பார்மசூட்டிகல்ஸ், எம்சிடபிள்யூ ஹெல்த்கேர், மெக்லியாட்ஸ் பார்மச்சூட்டிகல்ஸ், சிப்லா மற்றும் லூபின் ஆகிய மருந்து நிறுவனங்கள். அதேபோல இந்த மாத்திரைக்குத் தேவையான முக்கிய வேதிப் பொருட்களை சப்ளை செய்யும் மிகப் பெரிய நிறுவனங்கள் என்று பார்த்தால் அப்போட் இந்தியா, ருசான் பார்மா, மங்கலம் டிரக்ஸ், யுனிசெம் ரெமடிஸ், லாரஸ் லேப்ஸ் மற்றும் விஜயஸ்ரீ ஆர்கானிக்ஸ் ஆகியவை உள்ளன.
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் Vs கொரோனாவைரஸ்: உடலுக்குள் நடப்பது என்ன?
அதிக கிராக்கி
இந்த கலவைப் பொருட்களுக்குத் தேவையான மூலப் பொருள் அதாவது ரா மெட்டீரியல் பெரும்பாலும் சீனாவிலிருந்து வருகிறது. அதேபோல தென் கொரியா, இத்தாலி, பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த மருந்தின் விலை மிக மிக குறைவுதான். அதாவது ஒரு மாத்திரை ரூ. 3தான். தற்போது ஹைட்ராக்ஸிகுளோரோக்வின் மாத்திரைக்கு உலக அளவில் மிகப் பெரிய கிராக்கி ஏற்பட்டுள்ளதால் ஆட்டோமேட்டிக்காக இந்தியாவின் பக்கம் அத்தனை பேரும் திரும்பியுள்ளனர். நாமும் வேறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இதை கொடுப்பதாக உறுதி அளித்து விட்டோம். எனவே இந்த மருந்தை தயாரிக்கும் மருந்து நிறுவனங்கள் உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க ஆரம்பித்து விட்டனவாம்.
பல்டி அடித்து தடை நீக்கம்
உண்மையில் இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய மார்ச் 25ம் தேதிதான் மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் டிரம்ப் போட்ட போட்டில் மத்திய அரசு அப்படியே யு டர்ன் போட்டு ஏற்றுமதிக்கு கதவுகளை திறந்து விட்டுள்ளது. மனிதகுலத்திற்கு எதிரான இந்தப் போரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குத் துணை நிற்போம் என்று பிரதமர் நரேந்திர மோடியே கூறி விட்டார். இதனால் மருந்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு இந்திய நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் அதிக தேவை
அமெரிக்கா இதுவரை 29 மில்லியன் ஹைட்ராக்ஸிகுளோரோக்வின் மாத்திரைகளை உலக நாடுகளிலிருந்து பெற்றுள்ளது. இது போதாதென்று மேலும் பெருமளவிலான மாத்திரைகளை அது இந்தியாவிடம் கேட்டுள்ளது. அதேசமயம், இந்தியாவிலும் தற்போது இந்த மாத்திரைக்கான தேவை அதிகரித்துள்ளது. காரணம் இங்கும் பாதிப்பு அதிகரித்து வருவதால். இதனால் மொத்த பிரஷரும் மருந்து நிறுவனங்கள் மீது தற்போது விழுந்துள்ளன.
உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பு
தற்போது ஸைடஸ் கடிலா மற்றும் இப்கா லேப்ஸ் ஆஐகிய இரு நிறுவனங்களும் உற்பத்தியை அதிகரித்துள்ளனவாம். காரணம் உள்ளூர்த் தேவையும் அதிகரித்திருப்பதால் உற்பத்தியை பல மடங்கு அதிகரித்தாக வேண்டிய நிலைமை. ஸைடஸ் நிறுவனம் மாதம் 3 மெட்ரிக் டன் மாத்திரையை தயாரிப்பது வழக்கம். தற்போது அதை 20 முதல் 30 மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளதாம். தேவைப்பட்டால் இதை 50 மெட்ரிக் டன் வரை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாம்.
மாதம் 100 மில்லியன் மாத்திரைகள்
இப்கா லேப்ஸ் நிறுவனம் மாதத்திற்கு 20 மெட்ரிக் டன் வரை தயாரிப்பது வழக்கம். அந்த நிறுவனம் 100 மில்லியன் மாத்திரைகளை ஒரு மாதத்தில் தயாரிக்கும் திறன் கொண்டதாகும். தற்போது உற்பத்தியை மாதத்திற்கு 26 மெட்ரிக் டன்னாக உயர்த்த அது திட்டமிட்டுள்ளது. அதிகரிக்கும் உற்பத்திக்கு ஏற்ற வகையில் மூலப் பொருட்களும், பிற பொருட்களும் கையில் இருப்பதாகவும் இவை இரண்டும் தெரிவித்துள்ளன.
உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ்-செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்!
தரலாம் தரலாம்.. தடை நீக்கியாச்சு
இதில் என்ன காமெடி என்றால் இப்கா நிறுவனம் அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக இறக்குமதி தடைப் பட்டியலில் உள்ளது. அதாவது அமெரிக்காவில் மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒன்றாக இப்கா லேப்ஸ் உள்ளதாம். ஆனால் தற்போது தங்களுக்கு நேரம் சரியில்லாததாலும், கொரோனாவைரஸ் சிகிச்சைக்கு முக்கியமாக கருதப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோக்வின் மாத்திரையை அதிகம் தயாரிப்பது இந்தியாதான் என்பதாலும் இந்தத் தடையை தற்காலிகாக அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை நீக்கியுள்ளதாம்.
வாழ்க்கை ஒரு ரவுண்டு பாஸ்!
முன்பெல்லாம் சிவாஜி கணேசன் - எம்ஜிஆர் நடித்த அந்தக் காலத்துப் படங்களில் ஒரு குரூப் திடீரென ரத்த வாந்தி எடுக்கும்.. அப்படியே படுத்த படுக்கையாக கிடக்கும்.. உடனே டாக்டர் மேஜர் சுந்தரராஜன் போன்றோர் "This is a very Costly medicine .. அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட விலை உயர்ந்த மருந்து" என்று கூறி ஊசியை முகத்துக்கு நேராக காட்டி பின்னர் ஊசி போடுவது போன்ற பரபரப்பான காட்சிகளை வைத்திருப்பார்கள்.. ஆனால் இன்று 3 ரூபாய் மாத்திரைக்காக அமெரிக்காவே முட்டி போட்டு இந்தியாவிடம் நிற்கிறது..!