இந்திய பொருளாதாரம் 7.4 சதவீதம் வளர்ச்சியடையும்.. சொல்கிறார் சக்தி காந்த தாஸ்
மும்பை: 2021-22ம் நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 7.4 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளார், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்.
மும்பையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: தற்போதைய கொரோனா பாதிப்பு விவகாரம் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் வாகன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு சுமார் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் அரிசி, கோதுமைக்கும், பண புழக்கத்திற்கும் தட்டுப்பாடு இருக்காது. போதிய அளவுக்கு உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்த மாதிரி நிலைமையிலும், வங்கிகள் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. பொருளாதாரத்திற்கு பெரும் சவாலான நிலைமை ஏற்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பு நிலைமையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போருக்கு ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக மின்சார தேவையில் 25-30% சரிவு ஏற்பட்டுள்ளது, ஏற்றுமதி 34% குறைந்துள்ளது. உலகளாவிய நிதி நெருக்கடியை விட கொரோனா பிரச்சினை மோசமாக மாறிவிட்டது.
2020-21 ஆம் ஆண்டில், சர்வதேச நாணய நிதியம் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத புள்ளி அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என கணித்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் இந்தியா தனது பொருளாதார விஷயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.'
For 2020-21, International Monetary Fund projects sizable reshaped recoveries, close to 9 percentage points for the global GDP. India is expected to post a sharp turnaround & resume its pre-covid, pre-slowdown trajectory by growing at 7.4% in 2020-21: RBI Governor Shaktikanta Das pic.twitter.com/DviEHgz7Vu
— ANI (@ANI) April 17, 2020
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முந்தைய மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு முந்தைய நிலைமைக்கு இந்தியா கொண்டு செல்லப்படும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-22ம் நிதியாண்டில், 7.4% ஆக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு பிரச்சினை தொடங்குவதற்கு முன்பே, மொத்த உள்நாட்டு உற்பத்தி, 4க்கு கீழே போய் விட்டது. ஆனால் அடுத்த ஆண்டே எப்படி, 7.4 சதவீதம் வளரும் என்று சக்தி காந்த தாஸ் தெரிவித்தார் என்பதுதான் புரியவில்லை.