பைலட் இல்ல.. டிக்கெட் விலையும் ஜாஸ்தி.. தொடர்ந்து ரத்தாகும் இண்டிகோ விமான சேவை.. அவதியில் பயணிகள்
மும்பை:போதிய விமானிகள் இல்லை என்ற காரணத்தால் நாளொன்றுக்கு 30க்கும் அதிகமாக விமான சேவைகளை தொடர்ந்து 4வது நாளாக இண்டிகோ நிறுவனம் ரத்து செய்து வருகிறது.
சர்வதேச அளவில் மலிவு விலையில் விமான சேவை அளிக்கும் நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ நிறுவனம் ஆகும். அவ்வப்பொழுது அதிரடியாக... சலுகை விலையில் டிக்கெட்டுகளை அளித்து பயணிகளை கவர்ந்து வருகிறது.
இந்த நிறுவனத்தில் கடந்த 4 நாட்களாக விமான சேவை ரத்து செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையை அந்த நிறுவனம் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சலுகை அறிவிப்புகளை இண்டிகோ நிறுவனம் வழங்கினாலும்... பயண நேரம் துவங்கும் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளுக்கு கூடுதல் விலை வைத்து பயணிகளுக்கு சிரமம் தருவது, மாற்று விமான சேவைக்கு அதிக கட்டணம் வசூலிப்பது என்று பயணிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர்.
விமானங்களின் நேரத்தை அடிக்கடி மாற்றுவதால் போதிய விமானிகள் இன்றி விமான சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் செல்லும் விமானங்கள் அதிகளவு ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான தகவலை செய்திக்குறிப்பு ஒன்றின் வழியாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் பருவநிலை காரணமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. இதே நிலை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால்... வேண்டுமென்றே பட்ஜெட் சலுகை கொண்ட விமானத்தில் பயணிக்க... பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது... அதன் எதிரொலியாக விமானங்கள் ரத்து, விமானிகள் பணி நேரம் மாற்றம் ஆகியவையே காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.