மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டோமே...மொபைல் போனால் சிக்கிய கடத்தல்காரர்கள்
மும்பை : புகழ்பெற்ற டிவி ஷோவை பார்த்து சிறுவனை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய கொள்ளையர்களை போலீசார் 3 மணி நேரத்தில் பிடித்துள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பையின் புறநகர் பகுதியான மாலத் பகுதியில் ஷேகர் விஸ்வகர்மா (வயது 35) மற்றும் திவ்யன்சு விஸ்வகர்மா (வயது 21) ஆகிய இருவரும் சேர்ந்து, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவனை ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளனர். இரவு 7.30 மணிக்கு இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.
கடத்தப்பட்ட சிறுவனின் தந்தைக்கு போன் செய்த கடத்தல்காரர்கள், ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் தான் சிறுவனை விடுவோம் என மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை, உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து சிறுவனின் தந்தைக்கு வந்த போனை டிராக் செய்த போலீசார், மொபைல் போன் சிக்னலை வைத்து, வால்னய் காலனி பகுதியில் பதுங்கி இருந்த கடத்தல்காரர்களை 3 மணி நேரத்திற்குள் கைது செய்து, சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர்.
கடத்தல்காரர்களிடம் விசாரணை நடத்திய போது, டிவி.,யில் பிரபலமான க்ரைம் ஷோவை பார்த்து தான் இந்த கடத்தல் யோசனை வந்ததாகவும், பல நாள் அப்பகுதியில் நோட்டம்விட்டு கடத்தலில் இறங்கியதாகவும் குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.