குட்பை மோடி.. மகாராஷ்டிராவில் பாஜகவை கைகழுவத் தயாராகும் சிவசேனா
மும்பை: பாஜகவின் நெருங்கிய, நீண்டகால கூட்டாளி சிவசேனா. விரைவில் கூட்டணிக்கு டாட்டா சொல்லும் என்பது உறுதியாகி வருகிறது.
ஒத்த சித்தாந்தங்களை கொண்ட இந்த இரு கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட நெடுங்காலமாக இணைந்தே பணியாற்றி வருகின்றன. ஆனால் இரு கட்சிகளுக்கும் கடந்த 2014 முதலே நல்ல உறவு இல்லை. ஆனாலும் பிரியவும் இல்லை. கடந்த மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவும், பாஜகவும் மகாராஷ்டிராவில் பெருவெற்றி பெற்றன.
மொத்தமுள்ள 48 தொகுதிகளில் சிவசேனா 18 தொகுதிகளையும், பாஜக 22 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதன் பின்னர் மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பேரம் படியாததால் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. முடிவு சிவசேனாவை விட பாஜக அதிக தொகுதிகளில் வென்றதோடு சிவசேனாவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளையும் கைப்பற்றியது.
சிவசேனா கோபம்
இந்த முடிவுகள் சிவசேனாவை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது இருந்தாலும் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆதரவளித்தது. சிவசேனாவின் ஆதரவில்தான் பாஜக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் ஆட்சியமைத்தது. இருந்தபோதிலும் சிவசேனாவை ஆட்சியில் பாஜக சேர்த்துக் கொள்ளவில்லை.
உரிய மரியாதை இல்லை
மாநிலத்தில்தான் இந்த நிலை என்றால் மத்தியிலும் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று கருதுகிறது சிவசேனா. இதனாலேயே பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்த உத்தவ் தாக்கரே இப்போது தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார். தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் பாஜக வசம் சென்றுவிட்டதால் பிற தொகுதிகளில் பாஜகவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேதாரத்தை ஏற்படுத்துவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது சிவசேனா.
இதுவரை வெளியேறவில்லை
இரு கட்சிகளுக்கும் இவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா இதுவரை அதிகாரப் பூர்வமாக வெளியேறவும் இல்லை பாஜக வெளியேற்றவும் இல்லை. காரணம் கூட்டணியில் இருந்து வெளியேறினால் சிவசேனா எம் எல் ஏக்கள் பாஜகவுக்கு போகக் கூடிய ஆபத்து உண்டு என்பதை உத்தவ் தாக்கரே உணர்ந்தே உள்ளார். அதுபோல இவர்கள் வெளியேறினால் ஆட்சிக்கு ஆபத்து என்பதை பாஜகவும் உணர்ந்துள்ளது. ஆகவே இருவரும் மவுனம் காத்து வந்தனர்.
அமித் ஷாவின் தைரியம்
ஆனால் இப்போதைய நிலையில் 48 தொகுதிகளில் 40 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று அமித்ஷா கூற சிவசேனாவின் அதிகாரப் பூர்வ நாளேடான சாம்னாவும் நாமும் தனித்து போட்டியிடுவதுதான் நல்லது என்ற முடிவை அறிவித்துள்ளது. அமித்ஷாவின் இந்த அறிவிப்புக்கு பிறகும் கூட்டணியில் தொடர்ந்தால் நாடாளுமன்ற தேர்தலோ அல்லது அதற்கு பிறகு வரும் சட்டமன்ற தேர்தலோ பாஜக தரும் தொகுதிகளை மட்டுமே பெற முடியும் என்ற சூழல் உருவாகும்.