'ஹலோ வேண்டாம்' 'வந்தே மாதரம்' கூறுங்கள்.. இப்போ கட்டாயமில்லை.. மகாராஷ்டிரா அமைச்சர் திடீர் பல்டி!
மும்பை: அரசு ஊழியர்கள் செல்போனில் 'ஹலோ' என்ற வார்த்தைக்கு பதிலாக 'வந்தே மாதரம்' என கூறுவது கட்டாயமில்லை என இன்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர் சுதீர் முங்கண்டிவார் விளக்கம் அளித்து உள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்சிகள் நடந்தன.
இதேபோல் மாகாராஷ்டிரா மாநிலத்திலும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தின் கலாச்சார துறை அமைச்சர் சுதீர் முங்கண்டிவார் கலந்துகொண்டு பேசினார்.
'வந்தே மாதரம்' என கூறவேண்டும்
அப்போது அவர் கூறுகையில், ''இந்திய நாடு தற்போது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. சுதந்திர தின அமுத விழாவாக கொண்டாடும் இந்த நேரத்தில், வருகிற 2023ஆம் ஆண்டு ஜனவரி 26 வரை மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் செல்போனில் பேசும் போது 'ஹலோ' என்ற வார்த்தைக்கு பதிலாக 'வந்தே மாதரம்' என கூறவேண்டும்'' மேலும் அவர் கூறுகையில், '' 'வந்தே மாதரம்' என கூறும் நடைமுறையானது வருகிற 18-ந் தேதி அமலுக்கு வந்து அனைவரும் பின்பற்றவேண்டும்" என கூறியிருந்தார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
சுதந்திர தின கொண்டாட்ட விழாவில் பாஜனதா அமைச்சர் சுதீர் முங்கண்டிவாரின் இந்த பேச்சு பெரும் விவாதத்துக்குள்ளானது. இதற்கு பல்வேறு தரப்பினடும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் சுதீர் முங்கண்டிவாரின் பேச்சை கிண்டலடித்தனர். மேலும் இது தொடர்பாக அவருக்கு தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர்.
கட்டாயமில்லை
தொடர்ந்து பல்வேறு தரபினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இன்று பாஜக அமைச்சர் சுதீர் முங்கண்டிவார், ''அரசு பணியாளர்கள் செல்போன் அழைப்புகளின் போது 'வந்தே மாதரம்' என்று கூறுவது கட்டாயமில்லை" என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''தேசியவாதத்தை பிரதிபலிக்கும் எந்த நல்ல வார்த்தைகளையும், வாசகங்களையும் அரசு பணியாளர்கள் செல்போன் அழைப்பின் போது பேசலாம்" என்றார்.
அடுத்த ஆண்டு வரை தொடரும்
மேலும் அவர் கூறுகையில், '' குறிப்பாக செல்போனை அட்டன் செய்து பேசும் போது வந்தே மாதரம் என்று கூறலாம் அல்லது தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையிலான வாசகத்தையையோ, வார்த்தையையோ அரசு பணியாளர்கள் கூறலாம். இதேபோல் நான் கூறும் இந்த முறையினை ஒரு அமைப்புக்கோ அல்லது தனி நபருக்கோ எதிர்க்கும் உரிமை உண்டு. தற்போது வந்தே மாதரம் என்ற பிரச்சாரத்தை மாநில கலாச்சார துறை துவங்கி உள்ளது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வரை நடைபெறும்" என்று கூறியுள்ளார்.