சரத்பவார் சொல்வதை புரிந்து கொள்ள 100 முறை பிறக்க வேண்டும்.. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேச்சு
Recommended Video
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கு 100 முறை பிறக்க வேண்டும் என்று சிவசேனா மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. இதில் இருகட்சிகளும் இணைந்து அறுதிப்பெரும்பான்மை பெற்றன.
ஆனால் முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு தங்களுக்கு தர வேண்டும் என்று சிவசேனா கேட்ட நிலையில் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்த பாஜக, சிவசேனாவின் கோரிக்கையை நிராகரித்து.
சிவசேனா முயற்சி
இதனால் பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்த சிவசேனா இப்போது என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது.
கூட்டணி இறுதிகட்டம்
ஆனால் இதுவரை பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டமால் இருந்தது. தற்போது சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்கிறார்கள்.
சரத்பவார் பேச்சு
இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார்.
சுமார் 50 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாகவும், ஆனால் ஆட்சி அமைப்பது தொடர்பாக விவாதிக்கவில்லை என்றும் கூறினார்.
யாருடன் கூட்டணி
மேலும் 'எந்த கட்சியுடனும் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் ஆலோசிக்கவில்லை என்றும் அதற்கு மேலும் சில விஷயங்களில் தெளிவும் ஆலோசனையும் தேவைப்படுகிறது என்றும் சரத்பவார் தெரிவித்தார்.‘
விவாதித்தேன்
சோனியா காந்தி - சரத்பவார் சந்திப்புற்கு பின் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சரத்பவாரை அவரது இல்லத்தில் செவ்வாய்கிழமை நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத், விவசாயிகள் பிரச்சினை குறித்தே சரத்பவாருடன் தான் விவாதித்ததாக கூறினார். சரத் பவார் ஒரு மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய வேளாண்துறை அமைச்சர் என்றும் பிரதமரைச் சந்தித்து நாட்டில் விவசாயிகளின் துயரங்களைப் பற்றி அவருக்குத் தெரிவிக்க தலைவர்கள் குழுவை வழிநடத்துமாறு தான் அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
சஞ்சய் ராவத்
தொடர்ந்து கூட்டணி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி போது, அதற்கு அவர் "நீங்கள் என்சிபி மற்றும் எங்கள் கூட்டணியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மிக விரைவில், டிசம்பர் தொடக்கத்தில், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசாங்கம் மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும். இது ஒரு நிலையான அரசாங்கமாக இருக்கும் " என்றார்.
பிறக்கணும்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கு 100 பிறப்புகள் தேவை என்றும் சஞ்சய் ராவத் தனது பேட்டியில் கூறினார்.
நாங்கதான் வளர்த்தோம்
பாஜக கடுமையாக விமர்சித்து பேசிய சஞ்சய் ராவத் "மகாராஷ்டிராவில் பாஜகவை கட்டியெழுப்பிய சிவசேனா தான் அவர்களுக்கு இடங்களை வழங்கியது, அவர்களுக்கு எப்போதும் இடமளித்தது. ஆனால், இப்போது பாஜக பாராளுமன்றத்தில் சிவசேனா எம்.பி.க்களின் இருக்கைகளை மாற்றியுள்ளது, அதற்கான விலை அவர்கள் நிச்சயம் கொடுக்க வேண்டி வரும்" என்றார்.
நாங்கள் தயங்கினோம்
சமீப காலங்களில், பாஜகவுடனான கூட்டணிக்கு சிவசேனா தயக்கம் காட்டியது என்றும் ஆனால் "பாஜக தலைவர் அமித் ஷா சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் இல்லமான 'மாடோஷ்ரி'யில் வந்து இறங்கி மாநிலத்தில் கூட்டாண்மை பிரச்சினையை எழுப்பியதால் தான் கூட்டணி வைக்கப்பட்டது" என்று சஞ்சய் ராவத் கூறினார்.