அமெரிக்காவில் குடியுரிமை பெறுவது இனி ஈஸி.. டிரம்ப் போட்ட முட்டுக் கட்டையை நீக்கும் ஜோ பிடன்
மும்பை: குடியுரிமை தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளார். டொனால்ட் டிரம்ப் ஆட்சி காலத்தில் குடியுரிமை பெறுவதில் ஏற்படுத்தப்பட்டு இருந்த சிக்கலை நீக்கி, கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் எளிதாக அதைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வேலையின்மை நிலவுவதாகவும் எனவே, அமெரிக்க தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு இந்த தடை உத்தரவை பிறப்பித்தார்.
அமெரிக்காவில் குடும்பங்கள் பிரிந்து கிடக்கத்தான் இந்த விதிமுறை பயன்படுகிறது என்றும், அமெரிக்க வர்த்தகத்திற்கு இடையூறாக இருப்பதாகவும், ஜோ பிடன் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, ட்ரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை மாற்றியமைப்பதாக உறுதியளித்தார் ஜோ பைடன். இப்போது அதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளார்.
அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேற விரும்பும் பிற நாட்டவர்கள் அந்நாட்டு குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும்.
ட்ரம்ப் நிர்வாகம் இந்த தேர்வு முறைகளைக் கடுமையாக்கியது. 100 கேள்விகள் என்று இருந்ததை 128 கேள்விகளாக உயர்த்தியது டிரம்ப் நிர்வாகம். கடினமான கேள்விகளாகவும் மாற்றப்பட்டன.
இந்த விதிமுறைகள் 2020ம் ஆண்டு, டிசம்பர் 1க்குப் பிறகு குடியுரிமைகோரி விண்ணப்பிப்பவர்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகளையும் தளர்த்த ஜோ பிடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.