போராடும் விவசாயிகள் தீவிரவாதிகள்... கங்கனா ரானாவத் ட்வீட்டால் பரபரப்பு!!
ஜலந்தர்: வேளாண் மசோதாவுக்கு போராடி வரும் இதே தீவிரவாதிகள்தான் சிஏஏ மூலம் ஒருவர் கூட குடியுரிமை இழக்காத நிலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்'' என்று பகிரங்கமாக நடிகை கங்கனா ரானாவத் விமர்சனம் வைத்துள்ளார்.
வேளாண் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ராஜ்ய சபாவில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தினால், தோற்கடிக்கப்படும் என்ற அச்சத்தில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டம் வெடித்து வருகிறது. பஞ்சாப் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. இன்று தமிழ்நாட்டில் சிபிஎம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்ட பின்னர் பிரதமர் மோடி தொடர்ந்து இந்தி, ஆங்கிலம் பஞ்சாபி ஆகிய மொழிகளில் ட்வீட் செய்து இருந்தார். இதற்கு முன்னதாக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியில் பாஜக கூட்டணியில் இருந்த, ஷிரோமணி அகாலிதளம் கட்சியின் ஒரே அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதையடுத்து, பஞ்சாபில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.
பிரதமர் மோடி தனது ட்விட்டரில், ''குறைந்தபட்ச கொள்முதலில் எந்த மாற்றமும் இருக்காது. அரசின் கொள்முதலும் தொடர்ந்து நீடிக்கும். விவசாயிகளுக்கு சேவை செய்வதற்கு என்று நாங்கள் இங்கு இருக்கிறோம். அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம். அவர்களது எதிர்கால சந்ததிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்து இருக்கிறோம்'' என்று பதிவிட்டுள்ளார்.
உலகிலேயே மிக நீளமான...மணாலி - லே சுரங்கப்பாதை ... நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!!
இந்த நிலையில் பிரதமரின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், ''பிரதமரே தூங்கிக் கொண்டு இருப்பவர்களை எழுப்பி விடலாம். சிலரின் தவறான புரிதலை, அவர்களுக்கு விளக்கி புரிய வைக்கலாம். ஆனால், தூங்குவது போல் நடிப்பவர்களை என்ன செய்வது. இதே தீவிரவாதிகள்தான் சிஏஏ-வினால் யாரும் குடியுரிமையை இழக்காதபோது, ரத்தம் சிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்'' என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகிறது.