ஹே நான் ஜெயிலுக்கு போறேன்.. ஜெயிலுக்கு போறேன்.. வடிவேல் பட காமெடி போல் ஆன கங்கனா ட்வீட்
மும்பை: சுபாஷ், ஜான்சிராணி போல் நானும் விரைவில் சிறைக்கு செல்கிறேன் என நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மும்பை போலீஸ் சரியான விசாரணை நடத்தவில்லை என்றும் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் கங்கனா ரனாவத் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
அது போல் மகாராஷ்டிர அரசையும் அவர் கண்டித்தார். இந்த நிலையில் கங்கனா ரனாவத் சட்டவிரோதமாக கட்டடம் கட்டியதாக அவரது அலுவலகத்தை இடிக்க மும்பை மாநகராட்சி இடிக்க முற்பட்டது.
நடிகை கங்கனா ரனாவத்திடம் விமானத்தில் அத்துமீறியதாக புகார்.. 9 ஊடகவியலாளர்களுக்கு இண்டிகோ தடை
அலுவலகம்
அப்போது நடிகை கங்கனா, மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது என கூறி மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவரது அலுவலகம் இடிக்கப்படுவதிலிருந்து தடை வாங்கினார். இதையடுத்து அவருக்கு அதிக எதிர்ப்பு கிளம்பியது.
குற்றவியல் வழக்கு
பின்னர் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு எதிராக ட்விட்டரில் தொடர் கருத்துகளை பதிவிட்டுக் கொண்டே இருந்தார். மகாராஷ்டிரா அரசு அழிவதற்கு நாள் நெருங்கிவிட்டது என்றெல்லாம் கூறினார். இந்த நிலையில் கங்கனா வெறுப்பு பேச்சை பரப்புவதாக மும்பை போலீஸார் அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கை பதிவு செய்துள்ளனர்.
நம்பிக்கை
இதுகுறித்து நடிகை கங்கனா தனது ட்விட்டரில் கூறுகையில் வீர சாவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ், ஜான்சி ராணி ஆகியோரை நான் வணங்குகிறேன். அவர்களை போல் என்னையும் சிறையில் அடைக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. இது எனக்கு நம்பிக்கையை தருகிறது.
அர்த்தம்
சிறைக்கு செல்ல நான் காத்திருக்கிறேன். அவர்கள் அடைந்த அதே துன்பங்களை அடைய விரும்புகிறேன். அது எனது வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை கொடுக்கும். ஜெய் ஹிந்த் என தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனா குறிப்பிட்டுள்ளார். இதை பார்க்கும் போது வடிவேல் ஒரு திரைப்படத்தில் ஏ நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன், நானும் ரவுடிதான் என்பார். அதை போல் இருக்கிறது.