அன்பு சுஷாந்த்.. திரைப்பட மாஃபியா உன்னை துரத்தியது.. பிறந்தநாளில் கங்கனா உருக்கம்
மும்பை: திரைப்பட மாஃபியா உன்னை துன்புறுத்தியது, கேலி செய்தது என சுஷாந்த் சிங் பிறந்தநாளில் கங்கனா ரனாவத் பதிவு செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் "எம்.எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி" படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
தந்தை புகார்
மேலும் நடிகை ரியா சக்ரவர்த்தி தனது மகனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொன்றுவிட்டதாக சுஷாந்தின் தந்தை புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை கங்கனா ஒரு பரபரப்பு டிவிட்டை பதிவு செய்திருந்தார். அதில் வாரிசு நடிகர்களாலும் அவர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களாலும்தான் சுஷாந்த் மன உளைச்சல் அடைந்தார்.
தூக்கிட்டு தற்கொலை
இதனால்தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் கங்கனா. மேலும் பாலிவுட்டில் பெரிய பெரிய விஐபிக்களின் வீட்டு பார்ட்டிகளில் போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கின்றன என்ற ஒரு கருத்தையும் கங்கனா பதிவிட்டிருந்தார்.
உறுதுணை
இந்த நிலையில் சுஷாந்தின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து கூறியுள்ள நடிகை கங்கனா, தனது பதிவில் கூறுகையில் அன்பான சுஷாந்த், திரைப்பட மாஃபியா உன்னை தடை செய்தது, துன்புறுத்தியது, கேலி செய்தது. சமூக வலைதளங்களில் பலமுறை நீ உதவி கேட்டுள்ளாய். அப்போது நான் உன்னுடன் உறுதுணையாக நிற்கவில்லையே என வருந்துகிறேன்.
சமாளிப்பு
சமூக வலைதள சித்ரவதைகளை நீயாகவே சமாளித்து விடுவாய் என நினைத்திருக்கக் கூடாது. சுஷாந்த் இறப்பதற்கு முன்பு திரைப்பட மாஃபியா கும்பல் அவரை சினிமாவிலிருந்து தூக்கி எறிய முயற்சி செய்தது என தன்னுடைய படத்தை வெற்றி பெற செய்யுமாறு தன் நண்பர்களிடம் உதவி கேட்டு சுஷாந்த் எழுதியது குறித்தும் யாரும் மறந்து விட வேண்டாம். அவரது பிளாஸ்பஸ்டர் படங்கள் எல்லாம் தோல்விப் படங்களாகவே
அறிவிக்கப்பட்டன.
சுஷாந்த் தோற்று போன நடிகர்
கரண் ஜோஹர் தனக்கு பெரிய கனவுகளை காட்டி ஏமாற்றிய பின்னர் ஒட்டுமொத்த உலகத்திடம் சுஷாந்த் ஒரு தோற்றுப் போன நடிகர் என அழுதது பற்றியும் சுஷாந்த் கூறியதை மறந்துவிட வேண்டாம். இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் சுஷாந்தை கொன்றுள்ளனர். எனவே சுஷாந்த் சொன்ன விஷயங்களை யாரும் மறந்துவிட வேண்டாம் என கங்கனா கேட்டுக் கொண்டுள்ளார்.