சீனாவுக்கு பலியாகிவிட்டீகள், பேராசைக்கு அடிமையாகிவிட்டீர்கள்... ட்விட்டர் நிறுவனத்தை தாக்கும் கங்கனா
மும்பை: ட்விட்டர் மாற்று கருத்துகளுக்கு சகிப்புத்தன்மை காட்டுவதில்லை என்று டிரம்ப் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரத்தில் அந்நிறுவன சிஇஓ ஜாக் டோர்சியை பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் புகுந்து டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறைச் சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் ஒரு காவலர், உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். இதற்குப் பொறுப்பேற்று டிரம்ப் உடனடியாக அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதைப் பலரும் வலியுறுத்துகின்றனர்.
ட்விட்டர் பக்கங்கள் முடக்கம்
இதையடுத்து தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் ட்வீட் செய்து வருவதால் டெனால்ட் டிரம்பின் ட்விட்டர் பக்கமான @realDonaldTrump மற்றும் அவரது பிரச்சார அணியின் டிவிட்டர் பக்கமான @TeamTrump ஆகியவை நிரந்தரமாக முடக்கப்படுவதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்தது. அதேபோல அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கான @POTUS பக்கத்திலிருந்தும் சில ட்வீட்கள் நீக்கப்பட்டன.
சீறும் கங்கனா
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்குப் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். பேச்சு சுதந்திரம் குறித்து டிவிட்டர் சிஇஓ ஜாக் டோர்சி பதிவிட்டிருந்த பழைய ட்வீட்டை மேற்கொள்க் காட்டிய கங்கனா, "இஸ்லாமியவாத தேசங்களுக்கும் சீனர்களின் பிரச்சாரங்களுக்கும் நீங்கள் பலியாகிவிட்டீர்கள். இப்போது நீங்கள் உங்கள் லாபங்களுக்காக மட்டுமே முடிவுகளை எடுக்கிறீர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களுக்கு மட்டும் சகிப்புத்தன்மையைக் காட்டுகிறார்கள். உங்கள் சொந்த பேராசைகளுக்கு நீங்கள் அடிமையாகி விட்டீர்கள். எனவே, பேச்சு சுதந்திரம் குறித்து மீண்டும் எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம், அது கேவலமானது" என்று பதிவிட்டுள்ளார்.
ஜாக் டோர்சி ட்வீட்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டிவிட்டர் சிஇஓ ஜாக் டோர்சி, "ட்விட்டர் பேச்சு சுதந்திரத்திற்குத் துணை நிற்கும். அதிகாரம் மற்றும் உண்மை ஆகியவற்றுக்காக டிவிட்டர் எப்போதும் நிற்கும்" என்று பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட்டையே தற்போது நடிகை கங்கனா ரணாவத் மேற்கோள்காட்டிப் பதிவிட்டுள்ளார்.
கங்கனா டிவிட்டருக்கு எதிராக வழக்கு
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறார். கங்னாவின் சில கருத்துகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதால் அவரது டிவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்று அலி காசிப் கான் தேஷ்முக் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இருப்பினும், பேச்சு சுதந்திரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மும்பை உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.