இருங்க வர்றேன்.. மும்பைக்கு படையெடுக்கும் குமாரசாமி.. ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை சந்திக்க விரைகிறார்!
மும்பை: கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று மும்பை விரைகிறார்கள். இதனால் அச்சத்தில் உள்ள அதிருப்தி எமஎல்ஏக்கள் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மும்பை போலீஸ் கமிஷ்னருக்கு கடிதம் எழுதி உள்ளார்கள்.
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த குழப்பத்திற்கு தீர்வு காணாவிட்டால் ஆட்சியை பறிகொடுத்துவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் உள்ளன.
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 13 பேர் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. அதேநேரம் அவர்களின் பதவியை பறித்தாலும் ஆட்சி கவிழ்வது உறுதி என்ற நிலையே உள்ளது. இதன் மூலம் ஆட்சி அமைக்க தேவையான பலம் குறைவதால் 107 என்ற மெஜாரிட்டி பாஜகவிற்கு கிடைத்துவிடும்.
எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஓட்டல் முன்பு சிவக்குமார் உருக்கம்.. அனுமதி மறுப்பால் உச்சகட்ட பரபரப்பு
எனவே அபாயத்தை உணர்ந்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று மும்பை விரைகிறார்கள். மும்பையில் ரெனைசன்ஸ் மும்பை கன்வென்சன் சென்டர் ஓட்டலில் பாஜகவினரின் பாதுகாப்பில் தங்கியுள்ள 10 எம்எல்ஏக்களை சந்திக்க போகிறார்கள். இதனால் அவர்கள் தங்கியுள்ள ஓட்டல் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று காலை கர்நாடக அமைச்சர் டிகே சிவக்குமார் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு வந்தார். ஆனால் அவரை நுழைய அனுமதிக்க போலீசார் விடவில்லை. அவரை உள்ளே அனுமதித்தால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் என எம்எல்ஏக்கள் போலீசிடம் தெரிவித்த காரணத்தால் சிவகுமார் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எனினும் ஓட்டல் அமைந்துள்ள பகுதியிலேயே சிவக்குமார் முகாமிட்டுள்ளார்.
இந்த சூழலில் கர்நாடகா முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மும்பை வருவதால் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த சமாதானத்தின் போது என்ன நடக்கும், ஏதேனும் மாற்றம் நிகழுமா என்பது தெரியவில்லை. இதனால் கர்நாடக அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஓட்டல் முன்பு உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது.