இவ்வளவு பெரிய சிட்டிக்குள், காலங்காத்தால புகுந்த கறும் சிறுத்தை.. எப்போ பிடிப்பீங்க?
மும்பை: பரபரப்பான மும்பை நகரின் மரோல் பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் இன்று அழையா விருந்தாளியாக நுழைந்துள்ளது கறும் சிறுத்தை.
நம்ப முடிகிறதா.. கடற்கரை நகரமான மும்பைக்குள் சிறுத்தை வந்துவிட்டது என்பதை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கான சிசிடிவி காட்சிகள் கூட இப்போது வெளியேறிவிட்டன.
மரோல் பகுதியில் வசிக்கும் பிரமோத் சம்பத்வாத்தான் காலை 10 மணிக்கு அந்த பகீர் காட்சியை பார்த்துள்ளார். தனது காரை கிளப்ப சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
காருக்கு அடியில் படுத்திருந்தது நாயோ, பூனையோ கிடையாது. கறும் சிறுத்தை. அவ்வளவுதான்.. மனிதர் அலறியடித்து வீட்டுக்கே ஓடிவிட்டார். பிறகு இதுபற்றி வனத்துறை, தீயணைப்பு துறைக்கெல்லாம் தகவல் கொடுத்துள்ளார்.
Mumbai: A leopard has been spotted at Woodland Crest residential society in Marol. A team of Forest dept is present at the spot. Operation to rescue it, is underway. pic.twitter.com/eLasL7zAm1
— ANI (@ANI) April 1, 2019
இதுபற்றி வனத்துறை துணை காப்பாளர் ஜிதேந்திரா ரமகோன்கர் கூறுகையில், மக்களையும், சிறுத்தையையும் தீங்கின்றி காப்பாற்றுவதே எங்கள் முதல் பணி. சிறுத்தையை பிடிக்கும் பணி தொடருகிறது என்று கூறினார்.
வனப்பகுதி எங்கிருந்தோ எப்படியோ சிறுத்தை, மும்பை மாநகரத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. இது நகர மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. உடனடியாக சிறுத்தையை பிடிக்குமாறு வனத்துறைக்கு மக்கள் வலியுறுத்துகிறார்கள். இதனிடையே சிறுத்தை ஓடிச் சென்ற காட்சி சிசிடிவிகளில் பதிவாகி, அந்த வீடியோக்கள் மும்பைவாசிகளின் வாட்ஸ்அப்களில் சுற்றி வருகிறது.