கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 2 ஆண்டுகள் குறைகிறது சராசரி ஆயுட் காலம்!
மும்பை: இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பிறப்பு அடிப்படையிலான உத்தேச ஆயுட் காலத்தில் இரு ஆண்டுகள் குறைந்துவிடுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஐஐபிஎஸ் எனப்படும் மக்கள்தொகை ஆய்வுகளுக்கான சர்வதேச மையத்தின் பேராசிரியர் சூர்யகாந்த் இந்தியர்களின் ஆயுட்காலம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தை பிறப்பு மற்றும் மக்களின் இறப்பு விகிதம் நிலையாக இருப்பதை வைத்து பிறந்த குழந்தையின் சராசரி ஆயுட்காலம் கணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் வழக்கத்தை காட்டிலும் 35 முதல் 79 வயதுக்குள்பட்டோர் வரை அதிகளவில் இறந்துள்ளனர்.
இதனால் பிறப்பு, இறப்பு விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் 2020ஆம் ஆண்டு ஆண்களின் உத்தேச ஆயுட்காலமாக 72 ஆண்டுகள் என்று இருந்தது. ஆனால் தற்போது 69.5 ஆண்டுகளாக குறைந்துள்ளது. அது போல் பெண்களுக்கு 69.8 ஆண்டுகளில் இருந்து 67 ஆண்டுகளாக குறைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கூறுகையில் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பரவிய போது மக்களின் உத்தேச ஆயுட் காலம் குறைந்தது. எய்ட்ஸை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் உத்தேச ஆயுட்காலம் என்பது அதிகரித்துள்ளது என்றார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவல்களின்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 4.5 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். ஆனால் தரவு நிபுணர்களோ இந்தியாவில் கொரோனாவால் 10 லட்சம் பேர் இறந்திருக்கலாம் என கூறுகிறார்கள். ஆயுட் காலம் குறித்து இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா, இங்கிலாந்து, வேல்ஸில் ஓராண்டுக்கு மேல் குறைந்துள்ளது. அது போல் ஸ்பெயினில் 2.28 ஆண்டுகளாக குறைந்துள்ளது.
தற்போது இந்தியாவில் மனிதர்களின் சராசரி ஆயுட் காலம் என்பது 2010 ஆம் ஆண்டு இருந்ததை போன்றே இருக்கிறது. இதை அதிகரிக்க இன்னும் சில காலம் பிடிக்கும் என தெரிகிறது. சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கொரோனா பாதிப்பை கணக்கில் கொள்ளும் போது சராசரி ஆயுட் காலம் இரு ஆண்டுகள் குறைகிறது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும் என பெயர் வெளியிட விரும்பாத ஒரு நிபுணர் தெரிவித்துள்ளார்.