ரூபாய் நோட்டிலிருந்து காந்தியின் படத்தை தூக்குங்கள்.. பெண் அதிகாரியின் ட்விட்டால் வெடித்த சர்ச்சை
மும்பை: உலகில் உள்ள காந்தி சிலைகள் அனைத்தையும் அகற்றுங்கள், மேலும் இந்திய ரூபாய் நோட்டில் இருந்து காந்தியின் உருவ படத்தையும் அகற்றுங்கள் என பெண் ஐஏஎஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மாநகராட்சியில் துணை நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் நிதி சவுத்ரி. ஐ.எ.எஸ் அதிகாரியான இவர் கடந்த மாதம் 17-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் , உலகம் முழுவதும் காந்தி சிலைகளை அகற்றுங்கள், அவர் பெயர் வைத்துள்ள இடங்களில் பெயரை மாற்றுங்கள், ரூபாய் நோட்டில் அவரின் புகைப்படத்தை நீக்குங்கள் என்று ட்வீட் செய்திருந்தார்.
நிதி சவுத்ரியின் ட்விட் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த ட்விட்டர் பதிவில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி நடக்கும் கொண்டாட்டங்கள் வழக்கத்தில் இல்லாதது. அவரின் உருவத்தை ரூபாய் நோட்டில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மேலும் உலகில் உள்ள காந்தியின் சிலைகள் அனைத்தும் அகற்றப் பட வேண்டும்.
I have deleted my tweet of 17.05.2019 w.r.t. GandhiJi because some people misunderstood it
— Nidhi Choudhari🕉☪️✝️☸️ (@nidhichoudhari) May 31, 2019
If only they had followed my timeline since 2011 they would've understood that I would NEVER even dream of insulting GandhiJi
I bow before him with deepest regard & will do till last breath pic.twitter.com/CSjaKHF9BJ
அவரின் பெயரில் இருக்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சாலை ஆகியவற்றுக்கு வேறு பெயர் வைக்க வேண்டும். மகாத்மாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கும். காந்தியை 30.01.1948-ல் கொன்ற கோட்சேவுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் நிதி சவுத்ரிக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இந்த டிவிட்டர் பதிவுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. தேசப்பிதா மகாத்மா காந்தியை அவமானப் படுத்தியும், கொலையாளி கோட்சேவை புனிதப்படுத்தியும் பேசியுள்ள பெண் அதிகாரி நிதி சவுத்ரி மீது நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. கண்டனங்கள் வலுத்ததையடுத்து சர்ச்சைக்குரிய அந்த ட்விட்டர் பதிவை நீக்கியுள்ளார் நிதி சவுத்ரி.
கடந்த மாதம் 17 ம் தேதி பதிவு செய்திருந்த அந்த டிவீட்டை நீக்கிய நிதி சவுத்ரி, தனது ட்விட் திரிக்கப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளார். தாம் மகாத்மா காந்தியை அவமானப்படுத்தும் வகையில், எந்த கருத்தையும் கூறவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். மகாத்மா காந்தியின் சத்திய சோதனைதான் என்னுடைய விருப்பமான புத்தகம். என்னுடைய கருத்துக்கள் வேண்டுமென்றே திரிக்கப்பட்டுவிட்டன என்று விளக்கம் அளித்துள்ளார் நிதி சவுத்ரி.