ம.பி. வைரஸ் மகாராஷ்டிராவில் ஊடுருவ முடியாது: பாஜகவுக்கு சஞ்சய் ராவத் சாட்டையடி!
மும்பை: மத்திய பிரதேசத்தில் மையம் கொண்டிருக்கும் அரசியல் வைரஸ் மகாராஷ்டிராவில் ஊடுருவ முடியாது என பாஜகவை கடுமையாக தாக்கியுள்ளார் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்.
Recommended Video
நாடு முழுவதும் ராஜய்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக அதிகாரப் பசியோடு அலைந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை மிரட்டி உருட்டி ராஜ்யசபாவில் எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆடாத ஆட்டம் போடுகிறது.
பாஜகவில் இணையும் சிந்தியா
இதற்காக மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிவிட்டது பாஜக. ஜோதிராதித்யா சிந்தியாவை வளைத்த பாஜக, 20 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டதாக கடிதம் அளித்திருக்கிறது. ஆனால் பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்கள் என்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸுக்கு ரிட்டர்ன்
இந்த நிலையில் பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டுள்ள 19 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் காங்கிரஸுக்கே திரும்ப உள்ளதாகவும் பாஜகவுக்கு செல்ல விரும்பவில்லை எனவும் கூறியுள்ளனர். இதேபோல் ராஜஸ்தான், குஜராத்திலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு பாஜகவுக்கு தாவப் போவதாக அக்கட்சியின் ஆதரவு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவிலும் குழப்பம்?
மேலும் மகாராஷ்டிராவிலும் இப்படியான ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவும் பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக என்சிபி தலைவர் சரத்பவார் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். இதனை முன்வைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்கிறது என்கிற வதந்தி கிளப்பிவிடப்படுகிறது. இதனை காங்கிரஸும் நிராகரித்து வருகிறது.
சஞ்சய் ராவத் சாடல்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மத்திய பிரதேசத்தில் மையம் கொண்டிருக்கும் வைரஸ் மகாராஷ்டிராவில் ஊடுருவ முடியாது என நச்சென பதிலளித்துள்ளார். இதன் மூலம் பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் மகாராஷ்டிராவில் நடக்காது என்பது தெளிவாகி உள்ளது.