பரபர மகாராஷ்டிரா! சிவசேனா 16 அதிருப்தி எம்எல்ஏக்ளுக்கு பறந்து சென்ற தகுதிநீக்க நோட்டீஸ்!
மும்பை: மகாராஷ்டிராவில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலில் முதற்கட்டமாக 16 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகின்றன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல் அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் இந்த கூட்டணியின் ஆட்சி மீது சிவசேனாவின் எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால் அவர்கள் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஓட்டலில் தங்கி உள்ளனர்.
உஷாரா இருங்க! சிவசேனா சார்பில் பெரும் போராட்டத்தை நடத்தலாம்.. மகாராஷ்டிரா போலீசாருக்கு ‛அட்வைஸ்’
அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள்
சிவசேனாவின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 சிவசேனா எம்எல்ஏக்கள் அந்த ஓட்டிலில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில சுயேச்சை எம்எல்ஏக்களும் அவருடன் உள்ளனர். இதனால் ஆளும் கூட்டணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை இல்லாத நிலையால் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.
செவிசாய்க்காத அதிருப்தியாளர்கள்
பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம். சிவசேனா கட்சியின் எந்த தொண்டர் வேண்டுமானாலும் முதல்வராக வரலாம். இதனால் எனது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன் என உத்தவ் தாக்கரே கூறினார். இருப்பினும் அதிருப்தி எம்எல்ஏக்கள் இறங்கி வரவில்லை. இதையடுத்து மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத், சிவசேனா கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடனான கூட்டணியை முறித்து கொள்ளவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவும் பலன் அளிக்கவில்லை.
துணை சபாநாயகரிடம் வலியுறுத்தல்
இந்நிலையில் தான் உத்தவ் தாக்கரே தலைமையில் எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் தொடர்ச்சியாக நடந்தன. இதில் உத்தவ் தாக்கரேவுடன் உள்ள 13 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். தொடர்ந்து உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். மேலும் ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா சார்பில் சட்டசபை துணை சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டது.
16 பேருக்கு நோட்டீஸ்
இதற்கிடையே இன்று மகாராஷ்டிர மாநில முதலமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்கி உள்ள சிவசேனா எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று 16 சிவசேனா எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபை துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஜூன் 27 ம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே கொதிப்பு
இந்நிலையில் தான் ஏக்நாத் ஷிண்டே தரப்பு இதுபற்றி நேற்றே கருத்து தெரிவித்து இருந்தார். ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ‛‛எங்களை மிரட்ட தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நாங்கள் கட்சியை விட்டு விலகவில்லை. இதனால் தகுதி நீக்க நடவடிக்கை மூலம் எங்களை மிரட்ட முடியாது. எங்களுக்கும் சட்டம் தெரியும்'' என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் இன்று அவருடன் உள்ள 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.