மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சுயேட்சைகள் உள்ளிட்ட 29 எம்.எல்.ஏக்கள்
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியவர்களாக சுயேட்சைகள் உள்ளிட்ட சிறுசிறு கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் 29 பேர் உருவெடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களில் வென்றது. தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்.எல்.ஏக்களும் 11 சுயேட்சைகளும் ஆதரிப்பதாக கூறி பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.
முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ், நவம்பர் 30-க்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். ஆனால் என்சிபியின் 54 எம்.எல்.ஏக்களில் 40க்கும் மேற்பட்டோர் தாங்கள் பாஜகவை ஆதரிக்கவில்லை என கூறியுள்ளனர்.
இதனால் சட்டசபையில் பட்னாவிஸ் அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில் சுயேட்சைகள், சிறு கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் 29 பேர் உள்ளனர்.
என்சிபி எம்.எல்.ஏக்களின் ஆதரவு குறையும் நிலையில் இந்த 29 எம்.எல்.ஏக்களின் உதவியுடன் ஆட்சியை பாஜக தக்க வைத்துக் கொள்ளவே முயற்சிக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தற்போது சுயேட்சை எம்.எல்.ஏக்களாக இருப்பவர்களில் சிலர் பாஜக அதிருப்தி வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வென்றவர்கள். ஆகையால் அவர்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்கவே செய்யும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
ஏற்கனவே மஜ்லிஸ் கட்சியானது சிவசேனா-என்சிபி காங்கிரஸ் அரசு அல்லது பாஜக அரசு யாருக்கும் ஆதரவு இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது. அக்கட்சிக்கு 2 எம்.எல்.ஏகள் உள்ளனர். பிரகார் ஜனசக்தி கட்சியின் நிறுவனரான பாச்சு காடு, தாங்கள் சிவசேனாவையே ஆதரிப்போம் என கூறியுள்ளார். அக்கட்சிக்கும் 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.