அஜித் பவார் மீதான ரூ70,000 கோடி நீர்ப்பாசன ஊழல் புகார்: 9 முக்கிய வழக்குகள் முடித்து வைப்பு!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மீதான ரூ70,000 கோடி நீர்ப்பாசன ஊழல் வழக்கில் தொடர்புடைய 9 முக்கியமான வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் முடித்து வைத்துள்ளது. ஆனால் இந்த 9 வழக்கிற்கும் அஜித் பவார் வழக்கிற்கும் தொடர்பு இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.
மகாராஷ்டிராவில் பெரும் சர்ச்சைகளுக்கு இடையே முதல்வராக பட்னாவிஸ், துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுள்ளனர். இன்று பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.
ஆனால் அஜித் பவார் பொறுப்பேற்கவில்லை. மேலும் இப்புதிய அரசுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறது.
இந்நிலையில் இன்று அஜித் பவார் மீது முந்தைய பாஜக ஆட்சியில் தொடரப்பட்ட ரூ70,000 கோடி நீர்ப்பாசன திட்ட ஊழல் வழக்கில் 9 முக்கிய வழக்குகள் இன்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த 9 வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என கூறி போலீசார் இதனை முடித்து வைத்துள்ளனர்.
ஆனால் இந்த 9 வழக்கிற்கும் அஜித் பவார் வழக்கிற்கும் தொடர்பு இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. இதில் மொத்தம் 24 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மீதான விசாரணை எப்போதும் நடக்கும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கூறியுள்ளது.
நீர்ப்பாசன ஊழல் பின்னணி
1999-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு கால கட்டங்களில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி வகித்தார் அஜித் பவார். அப்போது விதர்பா பகுதிக்கான நீர்ப்பாசன திட்ட ஒப்பந்தங்களில் ரூ70,000 கோடி ஊழல் முறைகேடு நடைபெற்றது என்பதுதான் வழக்கு. இதனால் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தமது எம்.எல்.ஏ. பதவியையும் அஜித் பவார் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.