மராட்டிய பேரவை தேர்தல்.. மக்கள் செல்வாக்கு இல்லாத ராஜ் தாக்கரேவுடன் கூட்டணி இல்லை.. காங்., அறிவிப்பு
மும்பை: அக்டோபர் மாதம் மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலின் போது மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியுடன் கூட்டணி ஏதும் வைக்க போவதில்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல்களில், பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதே போல காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் இணைந்து இந்த தேர்தல்களில் களமிறங்கின.
ஆனால் பாஜக - சிவசேனா கூட்டணி அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 41 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று அசத்தியது. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியால், மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பெரிய தோல்வியை சந்தித்தது போலவே, மராட்டியத்திலும் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் பேரவை தேர்தல் கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்ற பேச்சு எழுந்தது.
சமீபத்தில் எந்த பிரதமரும் செய்யாத சாதனை.. இந்தியாவை இணைத்துவிட்டார் மோடி.. அட.. சொல்வது 'டைம்' இதழ்
வரும் அக்டோபரில் அம்மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்டிர நவநிர்மான் சேனாவுடன் காங்கிரஸ் கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பேரவை தேர்தலுக்கான யுக்திகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்கட்சி தலைவர்களின் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரத்னாகர் மகாஜன் பேசுகையில், பேரவை தேர்தல் போட்டிகள் மிக கடுமையானதாகவே இருக்கும் என கருத்து தெரிவித்தார். ஆனால் எங்களது முழுபலத்தையும் திரட்டி அத்தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறோம்.
இத்தேர்தலில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷின் வஞ்சித் பகுஜன் அகாடி மற்றும் ராஜ் தாக்கரேசின் நவ நிர்மான் சேனா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்றார். ராஜ் தாக்கரேவின் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. அதே போல பிரகாஷ் அம்பேத்கரின் கட்சி பாஜகவின் பி டீம் என்று தாங்கள் கருதுவதாக கூறினார்.
மக்களவை தேர்தலின் போது ராஜ் தாக்கரேவின் கட்சி பாஜகவிற்கு எதிராக பயங்கர பிரச்சாரம் செய்தது. ஆனால் எந்த கூட்டணியிலும் இணைந்து தேர்தலை சந்திக்கவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் பாஜக-விற்கு சாதகமாக வந்துள்ளது. இதனை வைத்து பார்த்தால் நவ நிர்மான் சேனாவின் பிரச்சாரம் வீண் என்றே தெரிகிறது.
அது போல தலித்கள் மற்றும் முஸ்லிம்களின் சமூக கூட்டணியான வஞ்சித் பகுஜன் அகாடி, மக்களவை தேர்தலில் சுமார் 14 சதவீத வாக்குகளை அள்ளியுள்ளது. 8-லிருந்து 10 தொகுதிகள் வரை காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் தோல்வியுற, இக்கட்சி காரணமாக இருந்ததால் காங்கிரஸ் அதன் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளது குறிப்பி்டத்தக்கது.