மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக - சிவசேனா தொகுதி பங்கீடு இன்று அறிவிப்பு?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு முடிவுகளை பாஜகவும் சிவசேனாவும் இன்று அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு வரை பாஜகவும் சிவசேனாவும் தலா 144 தொகுதிகளில் போட்டியிட ஒப்புக் கொண்டிருந்தன. தற்போது பாஜகவோ 165 இடங்களில் போட்டியிட விரும்புகிறது.
இதனை சிவசேனா ஏற்க மறுத்து வருகிறது. இதனால் இரு கட்சிகளிடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறியாக நீடிக்கிறது. இருப்பினும் இரு கட்சித் தலைவர்களுமே கூட்டணி உறுதி என்றே கூறி வருகின்றனர்.
பாஜகவைப் பொறுத்தவரையில் தேவேந்திர பட்னவிஸ்தான் முதல்வர் வேட்பாளர் என்கிறது. ஆனால் கட்சி தொண்டர்களிடையே பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மறைந்த தந்தை பால்தாக்கரேவுக்கு சத்தியம் செய்து கொடுத்ததன் அடிப்படையில் கட்சி தொண்டர் ஒருவரையே மாநில முதல்வராக்குவேன் என பேசியிருக்கிறார்.
அதேநேரத்தில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவைத்தான் முதல்வர் பதவிக்கு சிவசேனா முன்னிறுத்துகிறது என்கிற விமர்சனமும் இருக்கிறது. இதனிடையே பாஜக இன்னொரு பக்கம் கட்சியினரை சமாதானப்படுத்தும் வியூகங்களில் படு மும்முரமாக இறங்கியுள்ளது.
சிவசேனாவுக்கு கணிசமான தொகுதிகளை ஒதுக்கும் போது அத்தொகுதிகளில் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது; அப்படியான தொகுதிகளில் உடனடியாக தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கான குழுவையும் பாஜக அமைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இதே பார்முலாவை கடைபிடித்ததால் அமோக வெற்றியை பெற்றோம் என்பது பாஜகவின் நம்பிக்கை. அதனால் அதேபோன்ற அதிரடிக்கும் பாஜக தயாராகி வருகிறதாம்.