விரைவில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. பாஜக - சிவசேனா இடையே அடுத்த வாரம் தொகுதி பங்கீடு பேச்சு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக - சிவசேனா இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த நிலையில், சிவசேனாவின் கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க கூடாது என பாஜக-விற்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மூத்த சிவசேனா தலைவர் சுபாஷ் தேசாய் மற்றும் பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர், ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளுமே அதிக தொகுதிகளில் போட்டி போட விரும்புகின்றன.
இதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்பு இருந்ததை போலவே மகாராஷ்டிராவில் மிகுந்த செல்வாக்குடன் திகழ வேண்டும் என்ற பிடிவாதத்தில் உள்ளது சிவசேனா. இதற்காக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது மொத்தமுள்ள288 தொகுதிகளில், சரிபாதி தொகுதிகளை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது.
அதே சமயத்தில் கூட்டணி கட்சிகளுக்கு 18 தொகுதிகளை கொடுத்த பிறகு மீதமுள்ள 270 தொகுதிகளை சரிபாதியாக பிரித்து கொள்வதையே பாஜக விரும்புகிறது . இதுபற்றி கருத்து தெரிவித்த மூத்த பாஜக எம்எல்ஏ ஒருவர், தற்போது மகாராஷ்டிர பேரவையில் பாஜகவின் பலம் 122 ஆக உள்ளது. மேலும் 8 சுயேட்சைகளின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது. அதன்படி பார்த்தால் எங்களுக்கு கூடுதலாக 5 தொகுதிகள் மட்டுமே கிடைக்கிறது.
ஆனால் சிவசேனாவிற்கு 63 எம்எல்ஏ-க்கள் உள்ளதால் 270 தொகுதிகளை சரிபாதியாக பிரித்து கொள்வதால், சிவசேனாவிற்கே லாபம். இதனை அக்கட்சி புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஆனால் சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் மற்ற கூட்டணி கட்சிகள் எல்லாமே பாஜக ஆதரவாளர்களே. எனவே பாஜக தனது ஒதுக்கீட்டில் தான் அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும். எங்களை பொறுத்தவரை மொத்த இடங்களையும் ஆளுக்கு பாதியாக, தலா 144 தொகுதிகளாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் என கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த 2014-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது தொகுதி பங்கீடு பேச்சு தோல்வியடைந்ததால், பாஜக - சிவசேனா இடையே 25 ஆண்டு கால நட்பில் முறிவு ஏற்பட்டது. அப்போது மோடி அலை வீசியதால், மகாராஷ்டிராவில் பாஜக 122 இடங்களிலும், சிவசேனா 63 இடங்களிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.