சிவசேனாவிற்கு ஷாக் தர ரெடியாகும் அமித் ஷா.. கூட்டணிக்கு கல்தா? மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது?
மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா கூட்டணி உடைவதற்கு வாய்ப்பு உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா கூட்டணி உடைவதற்கு வாய்ப்பு உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அங்கு பாஜக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
மகாராஷ்டிராவில் மாநில சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. 288 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆனால் இந்த தேர்தலில் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு வாக்களிக்கவில்லை.
மும்பையில் மட்டுமே கொஞ்சம் கொஞ்சம் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 56% வாக்காளர்கள் மட்டுமே நேற்று வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக அபாரம்.. மகாராஷ்டிரா, ஹரியானாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.. அதிரடி எக்ஸிட் போல் முடிவுகள்
கூட்டணி ஆட்சி
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணிதான் தற்போது ஆட்சியில் உள்ளது. பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலையும் சந்தித்தது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகள் உள்ளது. இதில் 124-ல் சிவசேனா போட்டியிடுகிறது. 164 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
மாநில அரசு
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி 230+ இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. பாஜக மாபெரும் வெற்றியை இங்கு பெறும் என்று கணிப்புகள் தெரிவிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி
அதேசமயம் காங்கிரஸ் கூட்டணிக்கு 48 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். பிறருக்கு 10 தொகுதிகளில் மட்டும் வெற்றி கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மீண்டும் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.
மாபெரும் வெற்றி
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகள் உள்ளது. இதில் 145 இடங்களில் வெற்றிபெற்றால் ஆட்சி அமைக்க முடியும். இந்த நிலையில் பாஜக இங்கு தனித்தே 148 இடங்களையோ அதை விட அதிக இடங்களையோ வெல்லும் என்று கணிப்புகள் தெரிவிக்கிறது.
சிவசேனா எப்படி
ஆம், இந்த முறை மகாராஷ்டிராவில் பாஜக கட்சி சிவசேனாவின் துணை இல்லாமலே ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது சிவசேனா கட்சிக்கு தலைவலியை தர தொடங்கி உள்ளது.
முரண்பாடு
பாஜக சிவசேனா இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருந்தாலும், பல விஷயங்களில் முரண்பாடான முடிவுகளை எடுத்துள்ளது. மொழி பிரச்சனை தொடங்கி பல விஷயங்களில் இரண்டு கட்சிக்கும் வேறு நிலைப்பாடு உள்ளது. அதேபோல் பிஎம்சி வங்கி பிரச்சனையில் சிவசேனா, பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
சில சண்டை
பல முறை பாஜக - சிவசேனா இடையே கடுமையான சண்டைகள் கூட வந்துள்ளது. அதனால் பாஜக தனிப்பெரும் கட்சியாக இந்த தேர்தலில் வெற்றிபெற்றால், சிவசேனாவை கூட்டு சேர்க்காமல் ஆட்சி செய்ய முயற்சிக்கும் என்கிறார்கள். பாஜக இது தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளது.
என்ன நடக்கும்
அதே சமயம் இரண்டு கட்சியும் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தால் கூட, சிவசேனாவிற்கு முக்கிய அமைச்சர் பொறுப்பு எதுவும் கிடைக்காது. ஒருவேளை இப்போது கூட்டணி வைத்தால் கூட, எதிர்காலத்தில் கண்டிப்பாக பிரச்சனை வரும். அதனால் கூட்டணி உடையும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் .