மகாராஷ்டிரா தேர்தல்: நினைத்ததை சாதித்த பாஜக! ஆதித்யா தாக்கரேவுக்காக இறங்கிப் போன சிவசேனா!!
மும்பை: மகாராஷ்டிராவில் தனித்தே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க அதிக இடங்களில் போட்டியிடுவது என்கிற முயற்சியில் பாஜக வென்றுள்ளது. இன்னொரு பக்கம் மகன் ஆதித்யா தாக்கரேவை அதிகாரத்தில் அமரவைப்பதற்காக தொகுதிகளில் சமரசம் செய்து கொண்டிருக்கிறார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21-ல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா தேர்தலில் சரிபாதி இடங்களை அதாவது தலா 144 தொகுதிகளை பிரித்துக் கொள்வது என்பது லோக்சபா தேர்தலுக்கு முன்னரே பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தையின் முடிவு.
ஆனால் லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக மகாராஷ்டிராவில் கூட்டணி வியூகத்தில் தமது கை ஓங்கி இருக்க வேண்டும் என விரும்பியது. இதனால் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டபடி 144 தொகுதிகளை சிவசேனாவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என பிடிவாதம் காட்டியது பாஜக.
சிவசேனாவும் 144 தொகுதிகளுக்கு குறைவான தொகுதிப் பங்கீட்டை ஏற்கப் போவதில்லை என கூறிவந்தது. பாஜகவைப் பொறுத்தவரையில் 122 முதல் 126 தொகுதிகள்தான் சிவசேனாவுக்கு என்பதில் உறுதியாக நின்றது. இதனால் இரு கட்சிகளிடையேயான கூட்டணி ஏற்படுமா? கடந்த சட்டசபை தேர்தலைப் போல இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு பின்னர் கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்கிற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் மும்பையில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பாஜக மற்றும் சிறிய கட்சிகள் 164 தொகுதிகளிலும் சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பாஜகவைப் பொறுத்தவரை தாம் நினைத்ததைப் போலவே சிவசேனாவை விட அதிகமான தொகுதிகளைப் பெற்றுவிட்டது. பாஜக தமது இலட்சிய கனவான தனித்தே ஆட்சி அமைப்பதை நோக்கி விரைந்து செல்ல முயற்சிக்கும். சிவசேனாவைப் பொறுத்தவரையில் உத்தவ் தாக்கரேவுக்கு மகனுக்கு துணை முதல்வர் பதவி என்கிற பாஜகவின் பேரம் ஓகே எனப்பட்டிருக்கிறது. அதனால்தான் 124 தொகுதிகளில் நிறைவடைந்து விட்டார் உத்தவ் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.