மகாராஷ்டிரா தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 194 இடங்கள்; காங்.- அணிக்கு 86 இடங்கள்- ஏபிபி கருத்து கணிப்பு
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி 194 இடங்களைக் கைப்பற்றும் என ஏபிபி டிவ் சேனல் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இறுதி கட்ட பிரசாரங்கள் உச்சகட்டமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஏபிபி- சி வோட்டர் இணைந்து கருத்து கணிப்பை நடத்தின. இக்கருத்து கணிப்பு முடிவுகளின் விவரம்.
பாஜக-சிவசேனா கூட்டணி
இம்மாநிலத்தில் பாஜக- சிவசேனா கூட்டணி 194 இடங்களில் வெற்றி பெறும் என்கிறது இக்கருத்து கணிப்பு. இரு கட்சிகளும் இணைந்து மீண்டும் இம்மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு முடிவு.
எதிர்க்கட்சிகளுக்கு 86
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 86 இடங்கள்தான் கிடைக்குமாம். அத்துடன் இதர கட்சிகளுக்கு 8 தொகுதிகள் கிடைக்கலாம் என்கிறது ஏபிபி கருத்து கணிப்பு.
வாக்குகள் சதவீதம்
பாஜக கூட்டணிக்கு 47% வாக்குகள் கிடைக்குமாம். அதேநேரத்தில் காங்கிரஸ்- தேசியவாத காங். அணிக்கு 39% வாக்குகளும் பிற கட்சிகளுக்கு 14% வாக்குகளும் கிடைக்குமாம்.
2014-ல் எத்தனை இடங்கள்
288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு பெரும்பான்மைக்கு தேவை 145 இடங்கள், பாஜக தனித்து போட்டியிட்டு 122 இடங்களையும் சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.