அதிக இடங்களில் வெற்றி முகம்: மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக-சிவசேனா
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருவதால் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியை தக்க வைக்க இருக்கிறது.
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜகவும் சிறு கட்சிகளும் 164 தொகுதிகளிலும் சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
பாஜகவின் முதல்வர் வேட்பாளராக தேவேந்திர பட்னவிஸ் முன்னிறுத்தப்பட்டார். சிவசேனாவும் பாஜகவும் தலா 144 தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வது என முதலில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் பாஜக அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்தது. அத்துடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு துணை முதல்வர் பதவி என்கிற திரைமறைவு உடன்பாடும் எட்டப்பட்டது.
காங்கிரஸ் கூட்டணி
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இம்முறையும் கூட்டணி அமைத்து களத்துக்கு வந்தன. இரு கட்சிகளும் தலா 125 தொகுதிகளிலும் எஞ்சிய தொகுதிகளில் இதர கட்சிகளும் போட்டியிட்டன. தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரும் பாஜக-சிவசேனாவுக்கு கட்சி மாறியதால் அந்த கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்கிற நம்பிக்கையை இழந்தது.
போட்டி வேட்பாளர்கள்
அதேநேரத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் பாஜக மற்றும் சிவசேனாவில் வேட்பாளர்களுக்கு எதிராக பல தொகுதிகளில் உச்சகட்ட அதிருப்தி உருவானது. பல இடங்களில் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து சிவசேனா, சிவசேனாவை எதிர்த்து பாஜக பிரமுகர்கள் சுயேட்சையாகவும் போட்டியிட்டனர்..
திட்டவட்ட கருத்து கணிப்புகள்
ஆனால் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்துமே மகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணியே ஆட்சியை தக்க வைக்கும் என கூறின. இம்மாநிலத்தில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
பாஜக-சிவசேனா முன்னிலை
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக- சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் பாஜக-சிவசேனா கூட்டணியே ஆட்சியை தக்க வைக்கும் என தெரிகிறது.
உற்சாகத்தில் பாஜக கூட்டணி
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் இப்படித்தான் வரும் என எதிர்பார்ப்பு இருந்தததால் அம்மாநிலத்தில் காலை முதலே பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர். மும்பையில் பாஜக மாநில தலைமை அலுவலகம் வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. லட்டு உள்ளிட்ட இனிப்புகள் வழங்குவதற்கு காலை முதலே விறுவிறுப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
கொண்டாட்டங்கள் ஆரம்பம்
தற்போது அதிக இடங்களில் முன்னிலை என்கிற செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் பாஜக-சிவசேனா தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
2014 முடிவுகள் விவரம்
2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் தனித்துப் போட்டியிட்டன. பின்னர் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்தன. பாஜக கூட்டணிக்கு 185 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 86 இடங்களும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.