ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரி மகாராஷ்டிரா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
மும்பை: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மகாராஷ்டிரா சட்டபையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையில் சபாநாயகர் நானா படோல், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் எண்ணிக்கை தெரிய வேண்டும் என்பதற்காக இதை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், 2021-ல் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியின மேம்பாட்டுக்காக ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை எனவும் சபாநாயகர் நானா படோல் சுட்டிக்காட்டினார். தம்மிடம் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பிரதிநிதிகள் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இத்தீர்மானத்தின் மீது பேசிய துணை முதல்வர் அஜித் பவார், இது தொடர்பாக நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். பின்னர் அடுத்த மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தில் இத்தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார். இத்தீர்மானத்தை ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
இத்தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பாமக உள்ளிட்ட கட்சிகள் நீண்டகாலமாக இக்கோரிக்கையை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.