சட்டசபை, உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறை.. மகா. சட்டசபையில் மசோதா விரைவில் தாக்கல்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான மசோதா அம்மாநில சட்டசபையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தேர்தல்களில் வாக்கு சீட்டு முறைக்கு பதிலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பான சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.
பல்வேறு அரசியல் கட்சிகளும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் செயல்படுத்துவதற்கான மசோதா மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மாநில அரசுக்கு உரிய அதிகாரத்தின் படி, அரசியல் சாசனத்தின் 328வது பிரிவின் கீழ் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடத்தப்படும் சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் பயன்படுத்த முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நாட்டில் முதல் முறையாக வாக்குச் சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற இருக்கிறது மகாராஷ்டிரா. இது தொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் மகாராஷ்டிரா மாநில அரசு ஆலோசனை நடத்தி இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளும் இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.