எதுவும் வேலைக்கு ஆகல.. அவசர அவசரமாக மீட்டிங் நடத்தும் பாஜக.. மகாராஷ்டிராவில் என்னதான் நடக்கிறது?
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தொடர்ந்து சிக்கல் நிலவுவதால் அம்மாநில பாஜக எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தொடர்ந்து சிக்கல் நிலவுவதால் அம்மாநில பாஜக எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். நாளை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார் என்பதால் இந்த ஆலோசனை நடந்து வருகிறது.
மஹாராஷ்டிராவில் சிவசேனா தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக அதிரடி அரசியலை செய்து வருகிறது. என்ன நடந்தாலும் முதல்வர் பதவியை மட்டும் விட்டு கொடுக்க மாட்டோம். இதில் உறுதியாக இருக்கிறோம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.
அழைத்தார்
இதையடுத்து கடந்த 9ம் தேதியோடு முதல்வர் பட்னாவிஸ் பதவிக்காலம் முடிந்த நிலையில், 8ம் தேதியே அவர் பதவி விலகினார். நேற்று அம்மாநில ஆளுநர் பகத் சிங் பாஜக கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார். பாஜக தனிப்பெரும் கட்சியை என்ற காரணத்தால் அந்த கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜக ஆட்சி
நாளை பாஜக எப்படியாவது ஆட்சி அமைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் சிவசேனா கண்டிப்பாக எங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று கூறிவிட்டது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியும் பாஜகவிற்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
ஒத்துழைத்து போக முடிவா?
ஆகவே நாளைக்குள் எப்படி பெரும்பான்மை பெறுவது என்று தெரியாமல் பாஜக கடுமையாக குழம்பி வருகிறது. சிவசேனா உடன் உடன்படிக்கை செய்யலாமா? அவர்களுக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்கலாமா என்று பாஜக கடுமையாக ஆலோசித்து வருகிறது.
மீண்டும் மீட்டிங்
சிவசேனாவின் பிடிவாதம் காரணமாக இன்று மாலை பாஜக மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. அம்மாநில பாஜக எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆலோசனைக்கு பின் பாஜக தலைவர்களை ஆளுநரை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.